என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.2,177.27 கோடி நிதி கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (2.6.2026) சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், மத்திய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் டெல்லியிலிருந்தும் காணொலிக் காட்சி வாயிலாகக் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இருவர் முன்னிலையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது. உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் முதற்கட்டமாக 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது.

ஜல் ஜீவன் மிஷன்
தற்போது ஒன்றிய அரசினுடைய அமைச்சரவையின் ஒப்புதலின் அடிப்படையில் இத்திட்டம் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் மிஷன் (NJJM) மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவின் (SLSSC) ஒப்புதலுடன் தமிழ்நாட்டிலுள்ள 46.71 இலட்சம் வீட்டு (Functional Household Tap Connections) வழங்கப்பட்டு, 1.86 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் (Multi Village Schemes MVS), 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மறுசீரமைப்பு செய்தல் (Retrofitting CWSS) மற்றும் 21,258 ஒற்றைக் கிராமத் திட்டங்கள் (Single Village Schemes SVS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு
முதற்கட்ட உயிர் நீர் இயக்கத் திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு ரூ.18,123.05 கோடி ஆகும். இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.9,025.68 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.9,097.37 கோடி ஆகும். உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று கையெழுத்திடப்பட்டதன் மூலம், ஒன்றிய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் (DDWS) தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் முதற்கட்டமாக ரூ.2,177.27 கோடி நிதி கிடைக்கப்பெறும்.
மத்திய அரசு
உயிர் நீர் இயக்கத் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, கிராமப்புறங்களில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான, போதுமான மற்றும் நிலையான குடிநீர் வழங்கலை உறுதி செய்வதில் மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
ஜல் சக்தி துறை
இந்த நிகழ்ச்சியில் டெல்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மத்திய ஜல் சக்தி மற்றும் இரயில்வே துறை இணை அமைச்சர் வி. சோமன்னா, மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் அசோக் கே.கே. மீனா, டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். ஜெயா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications