Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 3% முதல் 5% வரை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வருடாந்திர கட்டண உயர்வு முடிவின்படி இந்த மாற்றம் நடைபெறுகிறது. குறைந்தபட்சமாக ரூ 10 முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
மாநிலம் முழுவதும் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் மொத்த 77 சுங்கச்சாவடிகளில் இது அமலாகிறது. சென்னை - கன்னியாகுமரி, திருச்சி - சேலம், சேலம் - கோவை போன்ற முக்கியச் சாலைகள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றன.

ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு பெறும் சுங்கச்சாவடிகளில், 60 கி.மீ. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையிலுள்ள 4 சுங்கச்சாவடிகள், மதுரை வெளிவட்டச் சாலையிலுள்ள 2 சுங்கச்சாவடிகள், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை, மாமல்லபுரம் நாவலூர் ஆகியவை அடங்கும். தேசிய நெடுஞ்சாலைகளில் மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வருடாந்திர அட்டவணைப்படி செப்டம்பர் 1 அன்று அமலாகும்.
போக்குவரத்து அல்லாத வாகன பயனாளர்களுக்காக, ரூ.3,000 மதிப்பிலான வருடாந்திர சுங்க அனுமதிச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 200 முறை பயணிக்க முடியும். இந்த புதிய திட்டம், வரும் ஆண்டுகளில் சுங்க வசூல் சீரான நிலையை எட்ட உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஈரானில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, வணிகச் சிலிண்டர் விநியோகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோகேஸ் பற்றாக்குறை, பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசியப் பொருட்கள், ஹோட்டல் உணவுகளின் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளது. தற்போதைய சுங்கக் கட்டண உயர்வு சரக்கு வாகனங்களுக்குச் செலவை அதிகரிக்கச் செய்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் சுங்க வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022-23 நிதியாண்டில் ரூ.3,758.23 கோடியாக இருந்த வருவாய், 2023-24ல் ரூ.4,157.96 கோடியாகவும், 2024-25ல் ரூ.4,300 கோடியாகவும் உயர்ந்தது. நடப்பு 2025-26 நிதியாண்டில், பிப்ரவரி 28 வரை ரூ.4,000 கோடி வசூலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications