போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு “சர்ப்ரைஸ்”.. பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு!
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 5 பொது மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் 5 பொது மேலாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 7 துணை மேலாளர்களுக்கு, முதுநிலை துணை மேலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், "அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பொது மேலாளர் சி.கே.ராகவன், கடலூர் மண்டலத்துக்கும், வேலூர் மண்டல பொது மேலாளர் ஜெ.எட்வின் சாமுவேல், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கும், கடலூர் மண்டல பொது மேலாளர் எஸ்.ராஜா, நாகப்பட்டினம் மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், ஈரோடு மண்டல பொது மேலாளர் கே.ஸ்வர்ணலதா, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கும், உதகை மண்டல பொது மேலாளர் ஏ.கணபதி, வேலூர் மண்டலத்துக்கும் பொது மேலாளர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், துணை மேலாளர் பொறுப்பில் உள்ள 7 பேருக்கு முதுநிலை துணை மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள் பொது மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மதுரை போக்குவரத்துக் கழக தொழில்நுட்பப் பிரிவு பொது மேலாளராக வி.கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி மண்டல பொது மேலாளராக பி.பாலசுப்பிரமணியன், விழுப்புரம் மண்டல பொது மேலாளராக டி.சதீஷ்குமார், சேலம் போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பிரிவு பொது மேலாளராக எஸ்.கலாவதி, திருப்பூர் மண்டல பொது மேலாளராக வி.சிவக்குமார், மதுரை மண்டல பொது மேலாளராக பி.மணி, காரைக்குடி மண்டல பொது மேலாளராக எஸ்.பி.கந்தசாமி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அண்மையில் 8வது கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications