"ஆரம்பித்த ஸ்டிரைக்.." வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள்.. தமிழகத்தில் பல இடங்களில் பஸ்கள் ஓடவில்லை
சென்னை: தமிழ்நாடு முழுக்க இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை,
தமிழகத்தில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து சமீபத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 23 தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பொங்கலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை தமிழக அரசுக்கும் தொழிற்சங்கங்கள் இடையே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. குறிப்பாக நேற்றைய தினம் தொழிலாளர் நல ஆணையம் விடுத்த அழைப்பின் அடிப்படையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் சுமுக முடிவு எடுக்கப்படும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும், அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அறிவித்த தொழிற்சங்கத்தினர், தமிழக அரசு ஒரே ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றத் தயாராக இல்லை என்றும் இன்று முதல் பேருந்துகள் ஸ்டிரைக் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தே மாநிலம் முழுக்க பேருந்துகள் சேவை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் இன்று போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ள நிலையில், அதிகாலை முதல் பேருந்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊர்களில் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி உள்ளன. பல பகுதிகளிலும் வழக்கமான எண்ணிக்கை காட்டிலும் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் சில இடங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கத் தேவையான அளவில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பணி முடிந்த ஊழியர்களை வைத்தே பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்றைய தினம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்ற போதிலும் பொங்கல் நெருங்க நெருங்க இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கவில்லை என்றால் பெரும் சிக்கல் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த ஸ்டிரைக் போராட்டத்தில் 23 தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர். தொமுச, ஐஎன்டியுசி தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. இதனால் அந்த தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications