ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஓட்டுநரை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை! - மக்கள் நல்வாழ்வுத்துறை வார்னிங்
சென்னை: அதிமுக பொதுக்கூட்டத்தில் நுழைந்த 108 ஆம்புலன்ஸை அக்கட்சியின் மறித்து சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஓட்டுநரை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.
நேற்று இரவு திருச்சி மாவட்டம் துறையூரில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பயணம் மேற்கொண்டிருந்தார். இதனால் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அங்கு கூடியிருந்தனர். இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று அந்த வழியாக செல்ல முயன்றது. இதை வழிமறித்த அதிமுகவினர் ஆம்புலன்ஸை சூறையாடினர். ஓட்டுநரையும் தாக்க முயன்றனர்.

இதனால் ஆம்புலன்ஸ் வேறு வழியின்றி வந்த வழியாகவே திரும்பி சென்றது. இந்த சம்பவத்தின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து மக்கள் நல்வாழ்வுத்தறை எச்சரிக்கைய கொடுத்திருக்கிறது.
அதில், "ஆம்புலன்ஸ் வாகனத்தை, ஓட்டுநரை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளது.
சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருந்தார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று சென்றிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், இனி இந்த வழியாக நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் சென்றால், அதன் ஓட்டுநர் நோயாளியாக ஆக்கப்பட்டு அனுப்பப்படுவார் என்று எச்சரித்தார். இதனையடுத்து அதிமுக கூட்டம் நடக்கும் வழியில் ஆம்புலன்ஸை ஓட்டி செல்லும் ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணித்து வருவதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில், ஆம்புலன்ஸையோ, அதன் ஓட்டுநரையோ தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்திருக்கிறது. இனியாவது நாங்கள் நிம்மதியாக பணியை செய்வோம் என நம்புவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications