கொளுத்திய கோடை வெயிலுக்கு இதமாக கொட்டிய மழை - சில நாட்களுக்கு இடியோடு மழை இருக்கு
தமிழகத்தில் மதுரை, சேலம், ஈரோடு நகரங்களில் 104 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளத
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்றைய தினம் மதுரை, சேலம், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கர்நாடகாவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்றைய தினம் திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.
ஏனைய உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பாக இருக்கும்.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கர்நாடகாவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்.
ஏப்ரல் 07, 08ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். 09 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரியும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.