டீசர் விட போகும் வானிலை.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வெளியான ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் நாளையில் இருந்து மழை மீண்டும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டீசர் இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தனது கணிப்பில் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த முறை எதிர்பார்த்ததை விட நல்ல மழையை கொடுத்துள்ளது. சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை பெய்துள்ளது.
ஆனால் இன்னும் தென் மாவட்டங்களில் பெரிதாக மழை பெய்யவில்லை. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் இன்னும் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை.
டெல்டாவுக்கு 2 லட்டு.. நார்த்+சவுத்! 2 நாள் அடித்து ஆடப்போகும் மழை -சூறாவளியால் மீனவர்களுக்கு அலர்ட்
வெயில்
சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் கூட சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்குத்தான் அதிக மழையை கொடுத்தது. பெரிதாக மத்திய மாவட்டங்களுக்கு மழையை கொடுக்கவில்லை. கிழக்கு காற்று காரணமாகவே மத்திய தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. மாண்டஸ் புயல் சென்ற பின் தமிழ்நாட்டில் மழை குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது.
புயல்
அதி தீவிர புயலாக இருந்த இந்த மாண்டஸ் புயலாக வலிமை குறைந்தது. கரையை கடந்த பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவி வந்தது. இந்த புயல் கரையை கடந்த நேரத்தில் சென்னையில் பல இடங்களில் 11 செமீக்கும் அதிகமான மழையை கொடுத்தது. இதன் பின் மேலும் நகர்ந்த புயல் தற்போது அரபிக்கடலை நோக்கி சென்றுள்ளது. இதனால் இன்னும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த புயல் காரணமாக பெரிய சேதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதால், புயலால் ஏற்பட வேண்டிய சேதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல் மிகப்பெரிய அளவில் வெள்ளம் ஏற்படுவதில் இருந்தும் தமிழ்நாடு தப்பியது. அதன்பின் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
வானிலை
இந்த நிலையில் வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த தாழ்வு பகுதி உருவானது. தற்போது இந்த தாழ்வு பகுதி வலுவடைந்து கொண்டு இருக்கிறது. இது அடுத்த மூன்று தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
என்ன நடக்கும்?
இதையடுத்து இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலையில் இருந்து மழை தீவிரம் அடையும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. அதன்பின் 21ம் தேதி தமிழ்நாட்டில் மழை வேகம் எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
என்ன நடக்கும்
21ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 22ம் தேதி இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
எங்கே மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு பின்பே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.