Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகம் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்காது.. இந்தியை ஏற்றால் தாய் மொழியை இழந்துவிடுவோம்- உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி, தமிழ்நாடு ஒரு போதும் மும்மொழி கொள்கையை ஏற்காது என்றார். மேலும், இந்தியை நாம் ஏற்றுக் கொண்டால் விரைவில் தாய் மொழி தமிழை இழந்துவிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்பது போலப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

Udhayanidhi Hindi

இதை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டித்து வரும் சூழலில், சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி, இந்தியை நாம் ஏற்றுக் கொண்டால் விரைவில் தாய் மொழி தமிழை இழந்துவிடுவோம் என்றார். மேலும், தமிழகம் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்காது என்ற உதயநிதி, மிரட்டலுக்கு அடிபணிவோம் என்று கருதினால் கனவிலும் அது நடக்காது என்றும் எங்களுக்கு அரசியலை விட மொழி, இன உணர்வு தான் முதன்மையானது என்றும் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், "இந்த போராட்டத்தில் நான் துணை முதல்வராகவோ.. விளையாட்டுத் துறை அமைச்சராகவோ அல்லது திமுக இளைஞரணி செயலாளராகவோ கலந்து கொள்ளவில்லை. சுயமரியாதை கொண்ட ஒரு சாதாரண திமுக தொண்டராகவே இதில் பங்கேற்றுள்ளேன். இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடு கொந்தளித்துப் போய் இருக்கிறது. தமிழர்கள் நாம் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். எந்த காலத்திலும் அடக்குமுறைக்கு அஞ்சவும் மாட்டோம் அடிபணியவும் மாட்டோம். இது மத்திய பாசிச பாஜக அரசுக்குப் புரிய வைக்கவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். இதில் பங்கேற்ற அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவொரு சிறப்புத் திட்டமும் இல்லை. ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. அவ்வளவு ஏன் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. ஃபெஞ்சல் புயலுக்கு ரூ.6675 கோடி நிவாரணம் தேவை என முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், வெறும் 950 கோடி மட்டுமே நிதி விடுவிக்கப்பட்டது. இதுவும் கூட மாநில அரசுக்கு ஆண்டுதோறும் தந்தே தீர வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதி தான் தந்தார்கள். மத்திய அரசின் கஜானாவில் இருந்து ஒரு ரூபாய் கூட தரவில்லை.

இப்போது இந்தியை ஏற்காததால் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு வரவேண்டிய 2190 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை. அந்த நிதியை உபி, குஜராத் போன்ற மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளது. இப்போது ஒரு படி மேலே போய் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிதி தருவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.

உரிமை கேட்கிறோம்

நான் மீண்டும் சொல்கிறேன்.. நாங்கள் உங்கள் அப்பா வீட்டுக் காசை கேட்கவில்லை. பிச்சையோ கடனோ கேட்கவில்லை.. தமிழக மக்கள் கட்டிய வரிப் பணத்தில் எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம். எங்களுக்குச் சேர வேண்டிய நிதி உரிமையைத் தான் கேட்கிறோம். தமிழக அரசையும் சரி தமிழக மக்களையும் சரி நீங்கள் ஒருபோதும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. இது திராவிட மண். இது பெரியார் மண்.. அண்ணா, கருணாநிதி உருவாக்கிய சுயமரியாதை மண்.

கடந்த 100 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டங்கள் அனைத்துமே இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே நடந்துள்ளன.. ஒன்று கல்விக்காக.. மற்றொன்று இந்தி திணிப்புக்கு எதிராக..! இன்று நமது இரு மொழி கொள்கைக்கு ஆபத்து வந்துள்ளது.

இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்க முயற்சி

இந்தியை ஏற்றே தீர வேண்டும் என்கிறார்கள். இந்தியைத் திணித்து தமிழகத்தின் வரலாற்றைப் பண்பாட்டைத் தனித்துவத்தை அழிக்க நினைக்கிறார்கள். இதன் மூலம் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்க பாஜக முயல்கிறது. இன்று தமிழகத்தைச் சேர்ந்த பலரும் உலகின் பல இடங்களில் முக்கிய பதவிகளில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் 99% தமிழக அரசுப் பள்ளிகளில் அரசு பாடத்திட்டத்தை இரு மொழி கொள்கையில் கற்றவர்கள் தான். இரு தமிழகம் கல்வியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. அதற்கு மத்திய அரசு நம்மைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை.. தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்.

அரசியலுக்காக இந்தியை ஏற்க மறுப்பதாகச் சொல்கிறார்கள். நான் இதற்குப் பதிலாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்களுக்கு அரசியல் எல்லாம் இரண்டாம்பட்சம் தான். எங்களுக்கு மொழி உணர்வும், இன உணர்வும் தான் முதன்மையானது. மொழிக்காக உயிரை விட்ட மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராசனின் மண் இது. இதை எல்லாம் மறந்துவிட்டு உங்கள் மிரட்டலுக்கு அடிபணிவோம் என நினைத்தால் அது கனவிலும் நடக்காது.

Udhayanidhi Hindi

அழியும் தாய் மொழிகள்

மற்ற மாநிலங்கள் எல்லாம் இந்தியை ஏற்கும் போது தமிழகத்திற்கு மட்டும் என்ன பிரச்சினை எனக் கேட்கிறார் தர்மேந்திர பிரதான். இந்தியை ஏற்ற பல மாநிலங்கள் தங்கள் தாய் மொழியையே இழந்து நிற்கிறார்கள். ராஜஸ்தான் (ராஜஸ்தானி), பீகார் (பீகாரி மொழி), ஹரியானா (அரியான்வி), உத்தர பிரதேசம் (போஜ்புரி) மாநிலங்களில் தாய் மொழி கிட்டதட்ட அழியும் சூழலில் உள்ளன. அங்கு இந்தி நுழைந்ததே இதற்குக் காரணம். இந்த மாநிலங்களில் அவர்கள் தாய் மொழியை மூன்றாவது மொழியாகவே படிக்கிறார்கள். இந்தி மொழி அந்த மொழிகளை மெல்ல விழுங்கிவிட்டது.

துரோகம்

நாமும் நமது இந்தியை ஏற்றால் தாய் மொழியான தமிழை இழந்துவிடுவோம். இதைவிடத் தமிழகத்திற்கு ஒரு துரோகத்தை யாராலும் செய்ய முடியாது. தமிழ்நாடு என்றும் மும்மொழி கொள்கையை ஏற்காது. இங்கு இரு மொழி கொள்கையே இருக்கும். இதை நமது முதல்வர் பலமுறை தெளிவுபடுத்தியும் உறுதி செய்தும் இருக்கிறார். எங்கள் மீது இந்தியைத் திணிக்க வேண்டாம். நாங்கள் இந்திய அரசியல் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கிறோம். இதன் காரணமாகவே எங்கள் உரிமைக்காக ஜனநாயக வழியில் குரல் கொடுக்கிறோம். தமிழ்நாடு அரசு மற்றொரு மொழிப்போரை நடத்தவும் தயங்காது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+