மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் 1.27 லட்சம் பேர் நீக்கம்! உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி? ஈசியான வழி
சென்னை: தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெற்று வந்த பயனாளிகளில் பல்வேறு காரணங்கள் காரணமாக சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா? அல்லது நீக்கப்பட்டுள்ளதா? என்பதை வெகு எளிதாக கண்டறியலாம். அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்..
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவை, திமுக தலைவரான ஸ்டாலின் எதிர்கொண்டு தேர்தலை சந்தித்தார். இதற்காக பல்வேறு திட்டங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையும் தயார் செய்யப்பட்டது.

அதில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதில் குறிப்பிடத் தகுந்த திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான்.
தமிழகம் முழுவதும் பெரிய அளவில் இந்த திட்டம் பேசப்பட்டது. ஏன் இந்தியா முழுமைக்குமே முன்னோடி திட்டமாக இது கருதப்பட்டது. இதேபோல் அதிமுகவும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் என அறிவித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஆயிரம் ரூபாய் உதவித் தொகை குறித்து பெரும்பாலும் பேசினார். இதேபோல திமுக மகளிர் அணி செயலாளராக கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்கள் பிரச்சாரத்தின் போது இந்த திட்டத்தை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சென்றனர்.
எதிர்பார்த்தது போல திமுக பெருவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 இலட்சமாக குறைந்து இருக்கிறது.
அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பயனாளிகளின் வங்கி கணக்குகள், நிலப்பதிவுகள் , வருமான வரி கணக்குகள், வாகனப்பதிவு ஆகியவை டிஜிட்டல் முறையில் சமூக பாதுகாப்பு ஆணையரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் இந்த நீக்கம் இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த அக்டோபரில் இந்த திட்டத்தின் கீழ் 1,140 கோடி வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், வருமான வரி செலுத்துபவர்கள்..ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர், மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள், சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் என பலர் இந்த வரையறைக்குள் வந்ததால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் தொடர்கிறதா? அல்லது நீக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிய பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அவர் இ-சேவை மையத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் கணினி அல்லது மொபைலிலேயே பயனாளிகள் நிலை குறித்தும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம். தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்குக்கெனவே https://kmut.tn.gov.in/login.html என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், login என்பதை க்ளிக் செய்து, 'பொதுமக்கள் உள்நுழைவு' என்பதை கிளிக் செய்தால், அதில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு 'ஓடிபி அனுப்பவும்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு தங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் 'ஓடிபி' உள்ளிட்டு 'கேப்ட்சாவை உள்ளிட்டு 'சரிபார்க்க' என்பதை க்ளிக் செய்தால் தங்கள் விண்ணப்பம் அல்லது தங்கள் பயனாளி நிலை குறித்த விபரங்கள் தெரியவரும்..












Click it and Unblock the Notifications