"ஒரு ரகசியம் சொல்றேன்! கட்சியில் பிரச்சினை!" பாஜக மூத்த தலைவர் தமிழிசை சொன்ன சீக்ரெட்
சென்னை: கட்சியில் பிரச்சினை என்றால் என்ன செய்வேன் என்பது குறித்த ரகசியத்தை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாமும் இது போல் செய்தால் என்ன என பலர் யோசனையில் இருக்கிறார்கள்.
தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள். தமிழிசை அரசியலுக்கு வந்து பாஜகவில் இணைந்ததற்காக அவருடைய தந்தை அவரிடம் பேசுவதில்லை என்ற கவலை இன்னும் அவருக்கு இருக்கிறது.

இவர் சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். பிறகு சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மகப்பேறு மருத்துவம் படித்திருந்தார். இவர் கனடாவிலும் படித்துள்ளார்.
இவருடைய கணவர் சவுந்திரராஜனும் மருத்துவர்தான். தமிழிசை, அரசியலுக்கு வருவதற்கு முன்பு சென்னை ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் 5 ஆண்டுகாலம் பேராசிரியையாக பணிபுரிந்தார். அவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் மருத்துவர்கள்.
தமிழிசை 1999ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் பாஜகவில் மருத்துவ பிரிவு, மாநில தலைவர், செயலாளர் தேசிய செயலாளர் என படிப்படியாக உயர்த்தப்பட்டார். பின்னர் அவர் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இதையடுத்து அவருக்கு அந்த ஆண்டே தெலுங்கானா ஆளுநராக நியமன பதவி கிடைத்தது. பிறகு புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பதவி அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆளுநர் பதவிகளை அவர் ராஜினாமா செய்தார்.
தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் கட்சியில் இணைந்து பணிகளை செய்து வருகிறார். தமிழிசை மருத்துவர், அரசியல்வாதி என்பதை காட்டிலும் சிறந்த இலக்கியவாதி. அடுக்குமொழியில் பிறருக்கு பதில்களை கூறுவதில் வல்லவர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் தமிழிசை. குமரி அனந்தனின் மகள் தமிழிசை கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர் என்ற பாராட்டும் உண்டு. இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் , வாவ் தமிழா எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் ஒரு ரகசியத்தை சொன்னார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: "நான் எல்லோருக்கும் ஒரு ரகசியத்தை சொல்கிறேன். எனக்கு ஏதாவது மன குழப்பம் இருந்தாலோ கட்சியில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ, நான் நேராக துணிக் கடைக்கு சென்று அங்கிருக்கும் புடவைகளை பார்ப்பேன். அங்கிருக்கும் புடவையின் டிசைன்கள், நிறங்களை பார்த்தாலே எனக்கு கட்சி பிரச்சினைகள் , குழப்பங்கள் எல்லாம் போய்விடும். அதற்காக அடிக்கடி எங்கள் கட்சியில் பிரச்சினை வர வேண்டும், நான் அடிக்கடி புடவை எடுக்க வேண்டும் என சொல்லவில்லை.
இந்த புடவைகளை எனக்கு பிடிப்பதில் ஒரு சுயநலமும் இருக்கிறது. நாங்கள் கலர் கம்மி. பள்ளி படிக்கும் போதிலிருந்தே கலர் கம்மியாக இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். நான் நடனம் நன்றாக ஆடுவேன். ஆனாலும் நான் கலர் கம்மியாக இருப்பதால் என்னை பின் வரிசையில் நிற்க வைப்பார்கள். அழகாக வெள்ளையாக இருக்கும் பெண்ணை முன்வரிசையில் நிற்க வைப்பார்கள்.
சிறியதாக இருக்கும் போதே நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக மாற்றப்பட்டோம். கருப்பான தோலை மாற்ற முடியாது. ஆனால் உடைகளை நேர்த்தியாக அணியலாம் என எனக்கு ஆசை வந்தது. நான் மருத்துவராக இருந்த போது கூட "டாக்டர் இன்று என்ன நிறத்தில் உடை அணிந்து வருகிறார்" என்பதை பார்க்க நோயாளிகள் காத்திருப்பார்கள். இவ்வாறு அந்த பேட்டியில் தமிழிசை தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications