பார்க்க"லியோ".. கேட்க"லியோ".. போட"லியோ".. 10 நாளாக லியோ லியோ தான்.. டைமிங்காக தமிழிசை ரைமிங்
சென்னை: கடந்த 10 நாட்களாக எங்கு பார்த்தாலும் லியோ லியோ லியோனு போய்க் கொண்டே இருக்கிறது என தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு 10 நாட்களாக லியோ குறித்த பிரச்சினைதான் ஓடி கொண்டிருக்கிறது. பார்க்க"லியோ", கேக்க"லியோ", போட"லியோ", சப்போர்ட் இல்"லியோ", அனுமதி இல்"லியோ".... அப்படினு லியோ லியோ லியோனு போய்கிட்டு இருக்கிறது. என்னை பொருத்தமட்டில் ஒரு நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள் (Standard Operating Procedure) இருக்க வேண்டும்.

ஆனால் குறிப்பிட்டவைகளுக்கு மட்டும் வழிகாட்டும் நெறிமுறைகள் (Selective Operating Procedure)இருக்கக் கூடாது. ஸ்டான்டர்ட் ஆபரேட்டிங் ப்ரொசீஜர் என்பது எந்த நடிகர் நடித்தாலும் எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்தாலும் அனுமதி வழங்க வேண்டும். இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், புதுவையில் காலை 7 மணிக்கு லியோ படம் வெளியிட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துவிட்டார்.
ஆனால் சில பல அழுத்தங்கள் வந்தும் காலை 7 மணி காட்சியை போட முடியவில்லை. காலை 9 மணிக்குத்தான் போச முடிந்தது. அதுவும் சில நிமிடங்கள் தள்ளி போனது. அதாவது வேறு ஒரு மாநிலத்தில், பக்கத்து மாநிலத்தில் ஒரு அனுமதி கொடுத்தாலும் கூட இங்கிருந்து கொண்டு அழுத்தம் கொடுத்ததால் 7 மணி காட்சியை போட முடியவில்லை.
இந்த அழுத்தமானது எப்படி வருகிறது என்றால் ரெட் ஜெயன்ட் எனும் தூய தமிழில் ஒரு நிறுவனம் நடந்து வருகிறது. அந்த நிறுவனத்தை தாண்டினால் பிரச்சினைதான் என அங்குள்ள நிர்வாகத்தினர் எனக்கு சொன்னார்கள். எல்லாவிதத்திலும் ஒரு அரசியலாக்க பார்க்கிறார்கள். விளையாட்டை விளையாட்டா பாருங்கள் என்கிறார்கள். அப்போ சினிமாவை சினிமாவாகத்தானே பார்க்க வேண்டும்.
எனவே ஒரு சுதந்திரமான சூழல் நிலவ வேண்டும். நான் கேள்விப்பட்டதை இங்கே சொல்கிறேன். ஜெய்ஸ்ரீராம் என சொல்வதால் மற்ற மதத்தின் சாமிகளை சொல்ல வேண்டாம் என சொல்லலியே. யாருக்கு எந்த உணர்வு வெற்றியை கொண்டாடுவதற்கு வருகிறதோ அதை கொண்டாடட்டும். உற்சாகம் வரும் போது இறைவன்தான் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தார்கள் என நினைக்கும் போது அதை சொல்வதில் தவறில்லை. மற்ற மதத்தினரும் அவர்களுடைய நம்பிக்கையை சொல்வதை நாம் தவறு என சொல்லவே முடியாது என்பது என் கருத்து. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
லியோ திரைப்படத்திற்கு காலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்குமாறு படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதே போல் காலை 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக காலை 7 மணி காட்சிக்கு கேட்டனர். அதை தமிழக அரசிடம் கேட்குமாறு நீதிபதி கூறியிருந்த நிலையில் அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications