ஆளுநர் உரையை வாசிக்காமல்.. சட்டசபையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ரவி!
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கி, தேர்தல் வாக்குறுதிகளை அளிக்க தொடங்கிவிட்டனர். பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியிருக்கிறது. இருப்பினும், ஆளுநர் உரையை வாசிக்காமல் கவர்னர் ரவி வெளியேறினார்.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பரபர வியூகங்களால் தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் இன்று (20.1.26) கூடுகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இதுவாகும். சரியாக இன்று காலை 9.30 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. இன்று ஆளுநர் உரைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சட்டசபை வரும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து அவர் உரையாற்ற வேண்டும். பொதுவாக சட்டசபை நிகழ்வுகள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அரசின் கொள்கைகள், திட்டங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிடுவார். ஆனால் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2024 மற்றும் 2025 வருடங்களில் ஆளுநர் உரையாற்றவில்லை. இன்றும் அவைக்கு வந்தவுடனேயே ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். கவர்னர் ரவி ஆளுநர் உரையை ஆற்றவில்லை.
ஆளுநர் உரை
தேசிய கீதம் இசைக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி அவர் உரையை புறக்கணித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சட்டசபையை விட்டே வெளியேறியிருந்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால், இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதனால் ஆளுநர் ரவி இன்று உரையாற்றுவாரா அல்லது கடந்தமுறை போல புறக்கணிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை (21 ஆம் தேதி) சட்டசபையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (22 ஆம் தேதி) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து எம்எல்ஏக்களின் விவாதம் நடைபெறும்.
முக்கிய அறிவிப்புகள்
கூட்டத் தொடரின் கடைசி நாளான 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த வாரம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.












Click it and Unblock the Notifications