கொரோனா காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு
சென்னை : கொரோனா காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
Recommended Video
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. வணக்கம், எனக்கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிய உரையுடன் தொடங்கி ஆளுநர் உரையுடன் முடிவடைந்தது. அதன்பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

ஆளுநர் உரை
சட்டமன்ற கூட்டத் தொடரில், தமிழக அரசு சார்பில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 6,230 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாகவும், கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துவதாகவும் ஆளுநர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். மேலும், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் எனவும், கொரொனா பேரிடர்காக 541.64 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், கொரொனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா
இந்த கூட்டத்துக்குப் பின், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, '' ஆளுநர் உரைக்குப் பிறகு, அலுவல் கூட்டம் நடைபெற்றது. அதில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டர். அந்தக் கூட்டத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், சட்டமன்றக் கூட்டத்தொடரை இரண்டு நாட்களில் முடிக்கலாம் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டு நாட்கள் நடக்கும்
நாளை நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரித்து, ஆளுநர் உரைமீது விவாதம் நடைபெறும். இன்னும் இரண்டு நாட்கள் தான் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். சட்டமன்றத்தில் நாளை காலை வினாக்களுக்கு விடையளிக்கப்படும். யாரெல்லாம் பேசலாம் என்பதை நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொண்டு கேள்வி பதில் கூட்டம் சுருக்கமாக இருக்கும்பட்சத்தில் அமையும்.

வெளிநடப்பு
சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதை நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிலுரையுடன் கூட்டம் நிறைவுறும். '' என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications