"உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்குங்கள்.." முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்! என்ன மேட்டர் தெரியுமா
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இது குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசியலில் இப்போதும் மிகவும் ஆக்டிவாக எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக வளர்க்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார். இந்தச் சூழலில் தமிழ்நாடு முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் இப்போது கொள்கை ரீதியாகவும் சரி கூட்டணி ரீதியாகவும் சரி நேர் எதிரே நிற்கும் கட்சிகளாக திமுகவும் பாஜகவும் இருக்கிறது.. ஆளும் திமுக அரசை பாஜகவினர் பல்வேறு சூழல்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பல நேரங்களில் திமுகவை நேரடியாகவும் கடுமையாகும் விமர்சித்து வருகிறார்.
அண்ணாமலை கடிதம்: இந்தச் சூழலில் அவர் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல. தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துகளையும் வகுத்துள்ளது. இதுகுறித்த வெள்ளை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
இதுதொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களைச் சந்தித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
ஆகவே, தாங்கள், வருகின்ற ஜூலை 11ம் தேதி முதல் 13ம் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்புக்கு ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களது மேலான பதிலினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு: தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது எப்போதும் முக்கியமான ஒன்றாகவே இருந்து வருகிறது. மாநிலத்தில் இளைஞர்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகி வருவதாகவும் இதைத் தடுக்க மாநிலம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். திமுக, அதிமுக தொடங்கி அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு குறித்துப் பேசியுள்ளன. இருப்பினும், அதை அமல்படுத்தவில்லை.
இதற்கிடையே மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை வகுக்கத் தமிழ்நாடு பாஜக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு தங்கள் பரிந்துரைகளை ரெடி செய்துள்ள நிலையில், இதை முதல்வரிடம் கொடுக்கவே அண்ணாமலை நேரம் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications