45 வேணும்.. ஒத்தக்காலில் நிற்கும் தமிழக பாஜக.. சொன்னா கேக்க மாட்டீங்க.. டெல்லில பேசிக்கறோம்- அதிமுக
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 45 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தமிழக பாஜக ஒற்றைக்கால் தவம் புரிகிறது. ஆனால் அதிமுகவோ முடியவே முடியாது, 20 தொகுதிகள்தான் தருவோம். அதற்கு மேல் ஒன்று கூட கிடையாது என கறார் காண்பிக்கிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம், என்னென்ன தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் பாஜகவுக்கு 20, பாமகவுக்கு 25, தேமுதிகவுக்கு 10, தமாகாவுக்கு 7, புதிய தமிழகம் கட்சிக்கு 2 என ஒரு பட்டியலை அதிமுக போட்டுள்ளது. மீதமுள்ள 170 தொகுதிகளில் அதிமுக போட்டியிட விரும்புகிறது.

பட்டியல்
ஆனால் தமிழக பாஜக தலைமையோ 45 தொகுதிகள் வேண்டும் என்கிறது. அதாவது ராஜ்யசபா எம்பி பதவிக்கு 39 தொகுதிகள் வீதம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களையும் சேர்த்து 45 தொகுதிகளை கேட்டு ஒரு பட்டியலையும் கொடுத்துள்ளதாம்.

செல்வாக்கு எங்கு
ஆனால் பாஜகவுக்கென எங்கு செல்வாக்கு இருக்கிறதோ அங்கு மட்டும் போட்டியிட வேண்டும். எல்லா தொகுதிகளையும் கேட்டால் எப்படி என அங்கலாய்க்கிறதாம் அதிமுக. மேலும் இவர்கள் கேட்ட சில தொகுதிகள் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளாகும். அங்கு பாஜக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு என்பது சந்தேகம்தான். எனவே சிறுபான்மையினர் வசிக்கும் தொகுதிகளில் அதிமுக போட்டியிட முயற்சிக்கிறது.

10 தொகுதிகள்
அது போல் தேமுதிகவும் வெளிப்படையாகவே 40 தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அதிமுகவோ 9 அல்லது 10 தொகுதிகள்தான் ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதற்கு வந்தால் ஓகே, வராவிட்டால் டபுள் ஓகே என்ற நிலைப்பாட்டில் அதிமுக இருக்கிறதாம். இது போதாகுறைக்கு சரத்குமார் கட்சி, கருணாஸ் கட்சி என உள்ளது.

தேமுதிக
தேமுதிகவை எப்படியாயினும் சமாளித்து கொள்ளலாம். ஆனால் பாஜகவை அந்தளவுக்கு உதறி தள்ள முடியாது. ஏனெனில் முதல்வரின் அழைப்பை ஏற்றே மோடி கடந்த 14 ஆம் தேதி சென்னைக்கு வந்துள்ளார். அந்தளவுக்கு பாஜகவில் முதல்வருக்கு செல்வாக்கு இருக்கிறது. இதனால் வேறு வழியே இல்லை. இன்னும் சில நாட்களில் டெல்லி சென்று தமிழக பாஜகவின் ஒற்றைக்கால் தவத்திற்கு ஒரு விமோசனம் கிடைக்க முறையிடவுள்ளதாம்.

பாஜகவின் கணக்கு
தமிழக சட்டசபையில் இதுவரை பாஜகவுக்கென எம்எல்ஏக்களே இல்லை. இந்த முறையாவது இரட்டை இலக்கத்தில் சட்டசபைக்குள் செல்ல 45 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பாதிக்கு பாதியாவது கிடைக்கும். அவர்கள் கொடுக்கும் 20 தொகுதிகளில் போட்டியிட்டால் இரட்டை இலக்கம் என்பது கஷ்டமாகிவிடும் என்பது தமிழக பாஜகவின் கணக்கு. எனவே டெல்லி சென்றால்தான் இதற்கு ஒரு விடிவு பிறக்கும் என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications