தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த சேது சமுத்திர திட்டம்! உரத்து குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழகத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்கிற குரல் உரத்து கேட்க தொடங்கிவிட்டது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற டிஆர்பாலுவின் பாதை மாறா பயணம் நூல் வெளியீட்டு விழாவில் சேது சமுத்திர திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கி.வீரமணி பேசுகிற போது சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அந்த திட்டத்தை தடுத்தது யார் என்று உங்களுக்குத் தெரியும். பா.ஜ.க. தான் தடுத்தது. இன்று, ''ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக உறுதியாக கூறமுடியாது" யார் சொல்கிறார், பி.ஜே.பி-ஐ சார்ந்த ஒன்றிய அமைச்சர்களில் ஒருவராக இருக்கக்கூடிய ஜிதேந்திரசிங் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா 1967-ஆம் ஆண்டு இந்த சேது சமுத்திரத் திட்டத்திற்காக சூலை 23-ஆம் நாளை 'எழுச்சி நாள்' என்று தமிழகம் முழுவதும் நடத்திக்காட்டினார். அதற்கு பிறகு காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, மன்மோகன்சிங் தலைமையில் அமைந்தபோது, அந்த திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டுமென்று கலைஞர் விரும்பியபோது 2004-ஆம் ஆண்டில். 2 ஆயிரத்து 427 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது அன்றைய ஒன்றிய அரசு, அதனை நிறைவேற்ற முயற்சியில் ஈடுபட்டது. அதற்கு காரணமாக இருந்தவர் இந்த விழாவினுடைய நாயகனாக இருக்கக்கூடிய நம்முடைய பாலு அவர்கள் தான்.
இவர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் இந்த பதினெட்டு ஆண்டுகளில் எவ்வளவோ பயன்களை இந்த தமிழ்நாடு அடைந்திருக்கும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இந்த பெருமை வந்து சேர்ந்திருக்கும். நாட்டினுடைய அந்நியச் செலாவணி வருவாய் அதிகரித்திருக்கும். தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகி இருக்கும். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரித்திருக்கும். கடல்சார் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம் வாழ்க்கைத் தரம் பெருகிப் போயிருக்கும். இத்தனை வளர்ச்சியையும் பாஜகவும் - அதிமுகவும் தடுத்துவிட்டது. இதனை மீண்டும் டி.ஆர்.பாலு கையில் எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் ஈடுபடவேண்டும். இது பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம்! தலைவர் கலைஞரின் கனவுத் திட்டம்! அதனை நிறைவேற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே டி.ஆர்.பாலுவின் பணி இன்னமும் தேவைப்படுகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேது சமுத்திர திட்டம் அல்லது சேதுக் கால்வாய் திட்டம் என்பது 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக முதல்வராக அப்போது மு.கருணாநிதி பதவி வகித்தார். ரூ 2,427.40 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்காக ரூ831.80 கோடி செலவிடப்பட்ட நிலையில் சேதுக்கால்வாய் திட்டம், ராமர் பாலத்தின் பெயரால் நிறுத்தப்பட்டது.அதாவது சேதுக் கால்வாய் வெட்டப்படும் பகுதியில் கடவுள் ராமரால் கட்டப்பட்ட பாலம் இன்னமும் இருக்கிறது; அதை இடிக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. அதனால் சேது கால்வாய் திட்டம் கைவிடப்பட்டது. இத்திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என ஒரு தரப்பும் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என மற்றொரு தரப்பும் குரல் கொடுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications