ஒடுக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பார் என நம்புகிறேன்! திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்ற திரௌபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு களமிறங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களமிறங்கினர்.

திரௌபதி முர்மு
இதில் திரௌபதி முர்முவுக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு அளித்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் தாண்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தன. இதனால் அவர் எளிதாக வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த ஜூலை 18இல் நடைபெற்றது.

தலைவர்கள் வாழ்த்து
இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மூன்றாம் சுற்று முடிவில் திரௌபதி முர்மு 50%க்கும் அதிகமான வாக்குகளைத் தாண்டினார். இதன் மூலம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். எதிர்பார்த்ததைக் காட்டிலும் திரௌபதி முர்முவுக்கு அதிகமான வாக்குகளே கிடைத்துள்ளது. புதிய குடியரசுத் தலைவராக உள்ள திரௌபதி முர்முவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவில் இருந்து வந்துள்ள நீங்கள், அரசியலமைப்பு சார் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத் துணை நிற்பீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்தித் தெரிவித்துள்ளார். புதிய குடியரசுத் தலைவராகும் திரௌபதி முர்முவுக்கு அதிமுக சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். அதேபோல தமிழ்நாட்டின் பல முக்கிய தலைவர்களும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

பிரதமர் மோடி
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். மேலும், திரௌபதி முர்முஜியின் வாழ்க்கை, அவரது ஆரம்பக்கால போராட்டங்கள், அவரது சேவை மற்றும் அவரது முன்மாதிரியான வெற்றி ஆகியவை ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது என்றும் அவர் நமது குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நம்பிக்கைக் கதிராக உருவெடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications