மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் பஸ் போக்குவரத்தை அமல்படுத்துவது தொடர்பான இன்றைய கலெக்டர்களுடனான முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. எனவே நாளை மறுபடியும் மருத்துவர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மே 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர் குழு
இந்த நிலையில்தான், 25ம் தேதி, மருத்துவ நிபுணர் குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி இருந்தது. அப்போது, கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டாம் என்று, மருத்துவ நிபுணர் குழு அப்போது பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

அரசின் வழிமுறை
இந்த நிலையில்தான், இன்று காலை, 10 மணிக்கு, தலைமை செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர். இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தகவல்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில் அரசின் வழிமுறை பின்பற்றினால்தான் கொரோனாவை தடுக்க முடியும். சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

நெருக்கம் அதிகம்
கை கால்களை கழுவ வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தும் இருக்கிறது. கொரோனா நோய் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா வேகமாக பரவுகிறது.

குணமடைகிறார்கள்
தமிழகத்தில் நோயாளிகள் குணமடையும் விகிதம் 50% ஆக உள்ளது. தமிழகத்தில் இருந்து 2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 170 ரயில்கள் மூலம் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 70 கொரோனா பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன என்றார்.

போக்குவரத்து
இதனிடையே நாளை மீண்டும், மருத்துவ குழுவோடு முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கு காரணம், இன்றைய கூட்டத்தில், மாவட்டங்கள் இடையே பஸ் போக்குவரத்தை துவங்க நிறைய கலெக்டர்கள் கோரிக்கைவிடுத்ததுதான் என்று கூறப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து, அல்லது, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களிடையே மட்டும் பஸ்களை இயக்க வேண்டும் என்பது கோரிக்கை. இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக நாளை மறுபடியும், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் முதல்வர்,அதில் இறுதியான முடிவு எடுக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications