அதிகரிக்கும் கொரோனா... முதல்வர் பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை.. புதிய கட்டுப்பாடுகள் அமல்?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழந்தனர்.

மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு புதிய உத்தரவுகள் அறிவிக்கப்பட்டது. இபாஸ், பேருந்து பயணங்களில் கட்டுப்பாடுகள் என தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது.
மேலும், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் தற்போதுள்ள நிலைமை குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை மதியம் 12 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள், சுகாதார துறை முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 2ஆம் தேதி தான் அறிவிக்கப்படும் என்பதால் தற்போது காபந்து அரசே உள்ளது. இதனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களால் எவ்வித முடிவையும் எடுக்க முடியாது. இருப்பினும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் நடத்தை விதிகளில் தேர்தல் ஆணையம் தளர்வுகளை மேற்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications