"ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" முதல்வர் ஸ்டாலின் டைமிங் ட்வீட்
சென்னை: நீட் விலக்கு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்,
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசியலிலும் கூட கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.

நீட் விலக்கு
இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் நீட் விலக்கு கோரி திமுக அரசு புதிய மசோதாவைத் தமிழ்நாடு சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

ஆளுநர்
சுமார் 6 மாதங்களாக இந்த மசோதா மீது ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்தச் சூழலில் இன்று, நீட் விலக்கு மசோதாவைச் சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.வரி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக உள்ளதாகவும் நீட் தேர்வு சமூக நீதியைக் காக்கும் வகையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஆளுநரை வாபஸ் பெற வேண்டும் என மக்களவையில், கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்ட திமுக எம்பிகள், அவையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர். மேலும், தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை எதிர்த்து ட்விட்டரில் ஆளுநருக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
இந்தச் சூழ்நிலையில், நீட் விலக்கு விவகாரத்தில் ஆலோசனை வழங்கக் கோரி நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ஆளுநர் தொடர்பாக அண்ணா கூறியதைக் குறிப்பிட்டும் முதல்வர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ""பேரறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவுநாளில், ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications