"ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி.." சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையிலேயே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் சூதாட்டம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பலரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தங்கள் சொத்துகளை, சேமிப்புகளை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
முதலில் சேமிப்புகளை இழக்கும் நபர்கள், அதன் பின்னர் கடன் வாங்கி விளையாடத் தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் மீளமுடியாத கடனில் சிக்கி தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

அடுத்தடுத்து அதிர்ச்சி
சமீபத்தில் கூட சென்னை பெருங்குடியில் வசித்து வந்த தனியார் வங்கி உதவி மேலாளர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் மனைவி மற்றும் மகன்களைக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்கச் சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர் டீக்காராம் என்பவரே கொள்ளைச் சம்பவம் நடந்தது போல நாடகமாடி பணத்தைக் கொள்ளையடித்தார்.

சமூக ஆர்வலர்கள்
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில், இதற்கு நிரந்தரமாக முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனாவால் தற்போது பெரும்பாலானோர் வீடுகளில் இருக்கும் சூழல் ஏற்படுவதால், அவர்கள் எளிதாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் நிலை ஏற்படுகிறது.

முதல்வர் உறுதி
இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம், "ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது; இதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது" என்று உறுதி அளித்தார்.

முதல்முறை இல்லை
தமிழ்நாட்டில் ஏற்கனவே கடந்த 2020 நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட அனைத்து சூதாட்ட விளையாட்டுக்களுக்குத் தடை விதித்து அவசரச் சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல, அது திறமையை வளர்க்கும் விளையாட்டு எனக் கூறியுள்ளது. எங்களது நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தியும், பணம் செலுத்தாமலும் விளையாட முடியும் என்றும் தெரிவித்தது.
Recommended Video

உயர் நீதிமன்றம்
மேலும், இந்தியா முழுக்க ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படாத நிலையில், தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திரத்தில் மட்டுமே தடை விதிக்கப்பட்டிருப்பது தவறானது என வலியுறுத்தினர். இதையடுத்து இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகின்றன என்பது குறித்து போதுமான காரணங்களைக் கூறவில்லை என்றும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது என்றும் கூறிய தமிழக அரசின் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications