"சும்மா வாய் வார்த்தை பேச மாட்டேன்".. 8 மாத செயல்பாடுகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின் - வீடியோ!
சென்னை: தமிழ்நாடு அரசின் 8 மாத செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் கடந்த 8 மாத ஆட்சி குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 8 மாத செயல்பாடுகளை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பேசி இருக்கிறார்.
பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்தும், இன்னும் நிறைவேற்றப்பட உள்ள தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இந்த வீடியோவில் பேசி இருக்கிறார். வீடியோவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில் ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன். இதுவரையிலான என்னுடைய செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின் வீடியோ
முதல்வராக பதவியேற்றதும் முதல் வேலையாக 5 முக்கியமான திட்டங்களுக்கு கையெழுத்து போட்டேன். ரேஷன் அட்டை வைத்து இருந்தவர்களுக்கு 4000 ரூபாய் வழங்கினோம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது. ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்தோம். நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி
இது எனக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமான திட்டம். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் நான் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை உருவாக்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றினோம். தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திமுக அரசு
தமிழ்நாடு முழுக்க சுற்றி சுற்றி நான் பெற்ற மனுக்கள் அனைத்தின் மீதும் வெறும் 100 நாட்களில் நான் தீர்வுகளை தேடிக்கொடுத்து இருக்கிறேன். தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டங்கள் மூலம் மக்கள் பயன். 80138 இல்லம் தேடி கல்வி மையங்களை உருவாக்கினோம். இதனால் பல லட்சம் மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர்.

பெண்களுக்கு இலவச பயணம்
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் நாங்கள் நலத்திட்டங்களை செய்து இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த திட்டங்கள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றுகிறோம். மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் உழைத்துக்கொண்டு இருக்கிறோம்.

திமுக தேர்தல் அறிக்கை
ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 49 அரசாணைகள் இதற்காக வெளியிடப்பட்டது. பதவி ஏற்றுக் கொண்டது முதல் தற்போது வரை 2619 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். தமிழ்நாட்டில் 8 மாதத்தில் சட்டசபையில் 1641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 1237 அறிவிப்புகள் அரசாணையாக வெளியிடப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது. மீதம் உள்ள அறிவிப்புகள் சீக்கிரம் செயலுக்கு வரும். ஒன்று மட்டும் சொல்கிறேன்... இந்த ஸ்டாலின் சொல்வதை செய்வான்.

திமுக ஸ்டாலின் வாக்குறுதி
நீங்களே எங்களின் தேர்தல் வாக்குறுதிகளை ஒப்பிட்டு பார்த்து நாங்கள் செயல்பட்டு இருக்கிறோமா என்று பார்த்துக்கொள்ளலாம். சும்மா வாய் வார்த்தை பேசும் நபர் நான் அல்ல.. நாங்கள் சொல்வதை கல்வெட்டு போல மனதில் பதிய வைத்து செயல்பட்டு வருகிறோம். கோட்டையில் அமர்ந்து உத்தரவு போடும் முதல்வர் அல்ல நான்.. கொரோனா காலத்தில் கொரோனா வார்டுக்கு சென்றேன்.. மழை காலத்தில் வெள்ளத்தில் இறங்கி மக்களை பார்த்தேன்.. குமரி, தஞ்சை, கோவை, காஞ்சி என்று எல்லா மாவட்டங்களிலும் என் கால்கள் சென்று இருக்கின்றன.

மக்களோடு இருப்பேன்
மக்கள் தடுப்பூசி போடும் இடங்களுக்கு, காவல்நிலையங்களுக்கு, ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று இருக்கிறேன்.. என்னை கலைஞர் இப்படித்தான் பழக்கி இருக்கிறார்.. மக்களோடு வாழ் என்று அண்ணா கூறினார். அதைத்தான் நான் செய்து இருக்கிறேன்.. நான் மக்களோடு இருப்பேன்.. அவர்களுக்காக சேவை செய்வேன்.. அவர்களுக்காக தொடர்ந்து உழைக்க காத்துகொண்டு இருக்கிறேன்.. நன்றி வணக்கம், என்று முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications