தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. இலங்கை ராணுவத்தைத் தடுத்து நிறுத்துங்கள்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: சர்வதேச சட்டங்களைப் பின்பற்றாமல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்கு உரியது எனத் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இது குறித்து இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்
கடந்த சில நாட்களுக்கு முன் கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் நாகை அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த கலைச்செல்வன்(33) என்பவர் காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டினால் தலையிலா பலத்த காயமடைந்த அவர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,சர்வதேச சட்டங்களைப் பின்பற்றாமல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இது குறித்து இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த ஆகஸ்ட் 1ஆம் நாள் அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து, நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஒன்பது மீனவர்களும் இந்தத் தாக்குதலிலிருந்து நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளனர்.

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்துக்குரியது. இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். இந்தச் சம்பவம், தமிழகத்தில், குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
எனவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications