தமிழகத்தில் 17ஆவது நாளாக தொடர்ந்து குறையும் கொரோனா.. ஆக்டிவ் கேஸ்களும் குறைவதால் நிம்மதி
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1329 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தினசரி உயிரிழப்பும் 15ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 2ஆம் அலை உச்சம் தொட்டது. தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு அந்த சமயத்தில் 30 ஆயிரம் வரைகூட சென்றது. இதையடுத்து மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
கொரோனா குறையக் குறைய ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதேபோல வேக்சின் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதனால், கொரோனா பாதிப்பு கிடுகிடுவெனக் குறையத் தொடங்கியது.

தினசரி கொரோனா பாதிப்பு
இன்று தொடர்ந்து 17ஆவது நாளாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 26,26,352 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பாசிட்டிவ் விகிதமும் மாநிலத்தில் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. தற்போது மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆகவே உள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.% ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்புகளும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12 பேரும் அரசு மருத்துவமனைகளிலும் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் திருவாரூரில் 3 பேரும் செங்கல்பட்டு, நாகை, சேலம், தஞ்சை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 16,252ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 16,130ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1436 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,26,352 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பில் இன்று தலைநகர் சென்னையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 132 பேருக்கும் செங்கல்பட்டில் 99 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கோவைத் தவிரத் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை.












Click it and Unblock the Notifications