உ.பி. பாஜக அரசை மிஞ்சும் தமிழக திமுக அரசு! ஆவடி அருகே ரூ20 கோடியில் பசுமடம்- களமிறங்கிய அமைச்சர்கள்!
சென்னை: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு பசுக்களைப் பாதுகாப்பதற்காக பசுமடம் ஒன்றை அமைக்க உள்ளது. சென்னையை அடுத்த ஆவடியில் ரூ20 கோடியில் பசுமடம் அமைக்கும் இடத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு செய்தது.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, பசுக்களை பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து வருகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் சுமார் 2,000 முதல் 2,500 பசுக்களை பாதுகாப்பதற்கான காப்பகங்கள் அமைக்கிறது உ.பி. அரசு.
இத்தகைய பசு காப்பகங்களில் வைக்கோல் உள்ளிட்ட தீவனங்கள் முன்னேற்பாடாக வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.

பசு ஆம்புலன்ஸ்
அதேபோல் இந்தியாவிலேயே முதல் முறையாக பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் தேவையையும் தொடங்கியது உ.பி. பாஜக அரசுதான். நோய்களாள் பாதிக்கப்படும் பசுக்களை பாதுகாக்க இந்த ஆம்புலன்ஸ் தேவை தொடங்கப்பட்டது. இதற்காக லக்னோவில் கால்சென்டர் ஒன்றையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்திருந்தார்.

ஆவடியில் பசுமடம்
தற்போது உ.பி. பாஜக அரசு பாணியில் தமிழக அரசும் பசுக்கள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழக சட்டசபையில் கடந்த 4-ந் தேதி பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய பசு மடம் அமைக்கப்படும் என்றார். இதனை சட்டசபை அறிவிப்பாக மட்டும் நிறுத்திவிடாமல் உடனே செயல்படுத்தவும் களமிறங்கிவிட்டார் அமைச்சர் சேகர்பாபு.

ஆய்வு செய்த அமைச்சர்கள்
ஆவடி அருகே கோயில்பதாகை பகுதியில் சுந்தரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் பசுமடம் அமைய உள்ள இடத்தை தமிழக அமைச்சர்கள் குழு நேற்று ஆய்வு செய்தது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் இந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

கோவில்களும் பக்தர்களும்
பசுமடம் தொடர்பான ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கோவில்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் இதுவரை 200க்கும் மேற்பட்ட கோவில்களை ஆய்வு செய்திருக்கிறோம். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கோவில்களில் உள்ள யானைகள், பசுக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
இந்த ஆய்வு தொடர்பாக தமது சமூக வலைதலப் பக்கத்தில் அமைச்சர் சேகர் பாபு எழுதியுள்ளதாவது: மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நடந்து முடிந்த 2022-23 தமிழ்நாடு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி, திருக்கோயில்களுக்கு தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய கோசாலை திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், கோயில்பதாகை அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு செந்தமான 25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ரூ.20 கோடி செலவில் புதிதாக ஏற்படுத்துவதற்கான பணிகளை மாண்புமிகு அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications