2018ம் வருஷம் வடகிழக்கு பருவமழை குறைஞ்சு போச்சு… சொல்வது சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: 2018ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை தமிழகத்தை ஒட்டு மொத்தமாக ஏமாற்றி சென்றுள்ளதாகவும், இயல்பான மழை அளவோடு ஒப்பிட்டால் 24 சதவீதம் குறைவு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு புயல் மழையால் அதிக சேதம் ஏற்பட்டது. டெல்டா மாவட்டங்களை ஒட்டுமொத்தமாக புரட்டி போட்ட கஜா புயலை அவ்வளவு எளிதாக யாரும் கடந்தோ அல்லது மறந்தோ சென்றுவிட முடியாது. 2018ம் ஆண்டு கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
அதேநேரத்தில் பிப்ரவரியில் இருந்து வளிமண்டல வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாகவும், மார்ச் 21 முதல் மே 21வரை மிக கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

பாலசந்திரன் பேட்டி
இந்நிலையில் தமிழகத்தில் மழை எவ்வாறு பெய்தது? அதன் பலன் என்ன என்பது குறித்து சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பல புள்ளி விவரங்களையும் வெளியிட்டார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் 89 சதவீதம் பதிவாகியுள்ளது.

குறைந்தது மழைப்பொழிவு
இது இயல்பான அளவோடு ஒப்பிட்டால் 24 சதவீதம் குறைவு. சென்னையில் இயல்பான அளவோடு ஒப்பிட்டால் 55 சதவீதம் குறைவாக மழை பெய்தது அதாவது 79 செ.மீ. மழைக்கு பதிலாக வெறும் 35 சதவீதம் மழையே பதிவாகி உள்ளது.

34செ.மீ மழை கிடைத்தது
தமிழகத்தில் இயல்பான அளவு 44 செ.மீ. மழை. இதில் 34 செ.மீ. மழைதான் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 59% இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது.

மழை குறைந்த மாவட்டங்கள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 40 முதல் 50 சதவீதத்துக்கும் குறைவான மழையும், 5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் குறைவாகவும், 4 மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் குறைவாகவும், 15 மாநிலங்களில் ஒன்று முதல் 19 சதவீதம் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.

அதிக மழை பெய்த நெல்லை
நெல்லையில் மட்டும் 11 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. வட கிழக்குபருவ மழையைப் பொருத்தவரை இயல்பை விட 24 சதவீதம் மழை குறைவு. நீண்ட நாள் வானிலை அறிக்கையின் அடிப்படையில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. வானிலை அமைப்பு என்பது அடிப்படையான வானிலை அமைப்பு, நகர்ந்து செல்லும் வானிலை அமைப்பு என 2 வகையாகப் பிரிக்கப்படுகிறது.

குறுகிய கால அறிக்கை
எல் நினோ, இந்திய இருமுனை நகர்வு ஆகியவைதான் வடகிழக்கு பருவ மழையை முன்கணிப்பு செய்யக் கூடிய முக்கிய விஷயம். குறுகிய கால அறிக்கை என்பது மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவை குறித்து அறிவிப்பது. 2018ம் ஆண்டைப் பொருத்தவரை எல் நினோ உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சாதகமான இருமுனை நிகழ்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல் நினோ உருவாவது தாமதமானது. இருமுனை நிகழ்வு செப்டம்பர் வரை வலுவாக இருந்தது.

தமிழகத்தை பாதித்த புயல்கள்
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுகுறைந்தது. எல்நினோவும் இல்லாத நிலையில், இருமுனை நிகழ்வும் ஏற்படாததால், அடிப்படை வானிலை நிகழ்வு சாதகமாக இல்லாமல் போய்விட்டதே வடகிழக்குப் பருவ மழை குறைய காரணமானது. நகர்ந்து செல்லும் வானிலை அறிக்கையை பொருத்தவரை 4 புயல்கள் உருவான நிலையில் கஜாவை தவிர மற்ற 3ம் தமிழகப் பகுதிகளில் இருந்து சாதகமில்லாத தூரத்தில் நகர்ந்து சென்றதால் காற்றின் ஈரப்பதம் குறைந்தது.

குறைந்தது வடகிழக்கு பருவமழை
மேலும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான வெப்பச் சலனம், வளிமண்டல மேலக்கு சுழற்சி போன்றவை மேற்கே நகர்ந்து செல்லாத நிலையில் தமிழகத்தில் மழை குறைந்தது. அதனால் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை 24 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. வானிலை சாதகமாக இல்லாததால் வடகிழக்குப் பருவ மழை குறைந்தது. தமிழகத்தில் 44 செ.மீ. மழைக்கு பதில் 34 செ.மீ. மழையே பதிவாகியுள்ளது என்று பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications