மக்களே! இனி அடிச்சு புடிச்சு ஓட வேண்டாம்.. காய்கறி கடை, மளிகை கடைகள் இயங்கும் நேரம் நீட்டிப்பு
சென்னை: காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரு தினங்களாக மருத்துவக் குழுவினர் மற்றும் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
அப்போது தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வெளியான அறிக்கையில் பேருந்து சேவைக்கான தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும்.

மத்திய அரசு
உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க மத்திய அரசு அனுமதியளித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் அதற்கு அனுமதி இல்லை. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் இனி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே மாலை 5 மணியுடன் கடைகள் மூடப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனீர் கடைகள்
உணவகங்கள், தேனீர் கடைகளில் இரவு 7 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பார்சலுக்கு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள்
பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் திறக்க தடை நீடிக்கிறது. ஆன்லைன் கல்வி முறை மூலம் பாடம் நடத்தலாம். காய்கறி, மளிகை கடைகள் தவிர ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட கடைகளை தற்போது காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூட்டம்
அது போல் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதாவது சமூக இடைவெளியுடன், நிறைய பேரை கூட்டம் சேர்க்காமல் விழாவை நடத்த வேண்டும் என மத்திய அரசு தனது வழிகாட்டு நெறிமுறைகளில் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications