இலவச பள்ளி சீருடை தைப்பவர்களுக்கு கூலி வழங்காத தமிழக அரசு.. ரூ.100 கோடி நிலுவை என புகார்
சென்னை: தமிழகத்தில் பெண்கள் தையல் கூட்டுறவு தொழிலாளர் சங்கங்களுக்கு சீருடை கூலி தொகையாக தமிழக அரசு 100 கோடி ரூபாய் வரை நிலுவை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தமிழகம் முழுவதும் 79 மகளிர் கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள் இயங்கி வருகின்றன இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர் இவர்களுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகளை தைத்து தரும் வேலை வழங்கப்பட்டு வருகிறது

ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கும் என்ற நிலையில் அரசு அதனையும் வழங்காமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய சங்கத்தைச் சேர்ந்த ஒருவர், ஆண்டுக்கு 5 அல்லது 6 மாதங்கள் தான் இந்த வேலை கிடைக்கும். இந்த சூழலில் நான்கு செட்டுகள் ஒரு ஆண்டுக்கு தைக்கும்போது, நான்கு செட்டுகளில் 2 செட்டுகள் தைத்ததற்கான கூலி தற்போது வரை வரவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூபாய் 6000 முதல் 8000 வரை கூலி கொடுக்காமல் நிலுவை வைத்துள்ளது அரசு. தமிழகம் முழுவதும் வேலை செய்யும் லட்சக்கணக்கான கூட்டுறவு பெண்களுக்கு, சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் கூலி வழங்காமல் தமிழக அரசு நிலுவை வைத்துள்ளது.
கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய, குறைவான கூலிக்கு துணி தைக்க கூடிய இந்த தொழிலாளிகளுக்கு இப்படி மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் கூலியை வழங்காமல் நிறுத்தி வைப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தையல் கூட்டுறவு தொழிலாளர் சங்கங்களில் இருக்கும் பெரும்பாலானோர், நலிவுற்ற மற்றும் ஆதரவற்ற பெண்களாவர். மாணவர்களுக்கான ஒரு பேண்ட் மற்றும் சட்டை தைக்க இவர்களுக்கு கூலியாக 52 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதைவிட மாணவிகளுக்கான சீருடை தையல் கூலித் தொகை மிகக் குறைவாக வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் சரி வர தமிழக அரசு வழங்காததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக பெண்கள்வேதனை தெரிவித்துள்ளனர்












Click it and Unblock the Notifications