சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா.. ஆளுநர் கேள்விகளுக்கு ஓரிரு நாட்களில் தமிழக அரசு பதில்!
சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கோரியிருந்த நிலையில், ஓரிரு நாட்களில் பதில் அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா,யுனானி யோகா, ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனிப்பல்கலைகழகம் நிறுவது தொடர்பான சட்ட முன்வடிவை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார்.

சித்த மருத்துவ பல்கலைக்கழகம்
சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்து வரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல்வரே வேந்தர்
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள் பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு சட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டது

ஆளுநர் விளக்கம் கேட்டு கடிதம்
இந்த நிலையில், அந்த மசோதாவில் சில விளக்கங்கள் கோரி ஆளுநர் தமிழ்நாடு அரசிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சட்ட முன்வடிவை அனுப்பியிருந்தார். ஆளுநரின் கேள்விகளுக்கு பதில் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு பதில்
இந்த நிலையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட மசோதா குறித்து கவர்னருக்கு ஓரிரு நாளில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்ட முன்வடிவிற்கான விளக்கங்களை தலைமை செயலாளர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications