தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4,626 கோடி.. மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைச் சீரமைக்க மத்திய அரசு ரூ.4,626 கோடியை வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக். 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது முதலே மாநிலத்தில் பரவலாகக் கனமழை பெய்தது. குறிப்பாக, நவம்பர் தொடக்கத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில், ஆறு பேர் கொண்ட குழுவை ஆய்வு செய்தது.
இந்தக்குழு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்களில் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்தனர். ஆய்வு முடித்துக்கொண்டு டெல்லி திரும்பியுள்ள இந்தக் குழு இன்னும் சில நாட்களில் தனது பரிந்துரையை மத்திய அரசுக்குத் தாக்கல் செய்யவுள்ளது.
முன்னதாக கனமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்க ரூ 549.83 கோடியும் நிரந்தரமாகச் சீரமைக்க ரூ 2,080 கோடியும் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில் மழை மேலும் தொடர்ந்ததால் வெள்ள பாதிப்புகள் அதிகரித்தது. இதையடுத்து மாநில அரசு சார்பில் வெள்ள பாதிப்புகள் மீண்டும் கணக்கிடப்பட்டது.
அதன்படி தற்போது ஏற்பட்டுள்ள புதிய சேதங்களையும் சேர்த்து, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ 1,071 கோடி ரூபாய்; நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு ரூ 3,555 கோடி என, மொத்தம் ரூ 4,626 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ 4,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications