மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1000! உங்களுக்கு பணம் வரலையா.. என்ன காரணம் தெரிஞ்சுக்க உடனே இதை பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் என்ன செய்ய வேண்டும் என மக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், இதற்குத் தீர்வாக முக்கிய நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
திமுக கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்தது. அப்படி அவர்கள் முன்வைத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மகளிர் உரிமை தொகை.. இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பிற்குத் தேர்தல் சமயத்திலேயே மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அதேபோல ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தது முதலே பலரும் இது குறித்தே கேள்வி எழுப்பி வந்தனர்.
மகளிர் உரிமை தொகை: இந்தச் சூழலில் தான் கடந்த பட்ஜெட் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் தான் இத்திட்டத்திற்குக் கலைஞர் உரிமை தொகை திட்டம் எனப் பெயர் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் இந்த திட்டத்திற்கான நடவடிக்கை படுவேகமாக நடக்கத் தொடங்கியது.. ரேஷன் கடைகள் மூலம் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் மொத்தம் 13 வகையான கேள்விகள் கேட்கப்பட்டன.
மேலும், இத்திட்டத்தில் பயன் பெறுவோருக்குப் பல கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. மற்ற குறிப்பிட்ட சில உதவித் தொகை திட்டங்களில் பயன் பெறக் கூடாது, மின்சார பயன்பாட்டில் உச்சவரம்பு என நிபந்தனைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. செப். 15இல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதற்கு முன்னதாகவே இதில் பலருக்கும் உரிமை தொகை சென்று சேர்ந்தது.
மாதம் ரூ.1000: இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு மாதம் 15ஆம் தேதி மகளிருக்கு உரிமை தொகை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை தொகை திட்டத்திற்குத் தமிழ்நாடு முழுக்க மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றான இதை விரைவாகச் செயல்படுத்த உதவியாக இருந்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றியும் தெரிவித்திருந்தார்.
இதில் 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 1.06 கோடி பேர் தேர்வாகினர். அதேநேரம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களில் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். எதற்காக தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதே பலருக்கும் தெரியவில்லை. உரிமை தொகை பெற தாங்கள் தகுதியுள்ளவர்கள்.. இருப்பினும் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என நினைக்கும் பெண்கள் இ சேவா மையங்கள் மூலம் அணுகலாம் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
புதிய இணையதளம்: இந்தச் சூழலில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக http://kmut.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர்.. இதில் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.. இந்த இணையதளத்திற்குச் சென்று பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணைத் தர வேண்டும். பிறகு ஆதார் இணைக்கப்பட்ட எண்ணிற்கு ஒடிபி வரும்.. அதைப் பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.
பொதுமக்கள் பலரும் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து குழப்பத்தில் இருந்த நிலையில், இந்த இணையதளம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications