தமிழகத்தில் வார இறுதியில் மீண்டும் வழிபாட்டுத்தலங்கள் மூடல்? முதல்வர் தீவிர ஆலோசனை.. பரபர தகவல்
சென்னை: ஓமிக்ரான் அச்சம் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யக் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2ஆம் அலைக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குறைந்தே வந்தது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா வேக்சின் பணிகளால் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வரத் தொடங்கியது.
இந்தச் சூழலில் தான் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு நிலைமையை மீண்டும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. உலகின் பல நாடுகளிலும் ஓமிக்ரான் கொரோனாவால் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அச்சுறுத்தும் ஓமிக்ரான்
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் அடுத்த தினசரி கொரோனா பாதிப்பும் ஆக்டிவ் கேஸ்களும் மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தியாவிலும் அதே நிலை தான். ஓமிக்ரான் உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பும் மீண்டும் மேல்நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து, வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ஏற்கனவே திரையரங்குகள், வணிக வளாகங்களுக்கு வரும் ஜன. 10ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓமிக்ரான் பரவல் காரணமாக இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அதிகரித்து வரும் கொரோனா குறித்தும் ஓமிக்ரான் நிலைமை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்,

வழிபாட்டுத் தலங்கள்
அப்போது வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களை மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வார இறுதி நாட்களில் தான் பொதுமக்கள் அதிகளவில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதால், வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதைக் கட்டுபடுத்தவே வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களை மூட வேண்டும் எனச் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தினர்.

கடைகள்
அதேபோல கடைகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் பெரும்பாலான கடைகளில் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் முதல்வருக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்தக் கூடுதல் கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை அல்லது நாளை மறுநாளே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறை இல்லை
தமிழகத்தில் கோயில்கள் வார இறுதி நாட்களில் மூடப்படுவது இது முதல்முறை இல்லை. 2ஆம் அலை ஏற்பட்ட போது அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளிலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. அதன் பிறகு வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னரே, கடந்த அக்டோபர் மாதம் அனைத்து நாட்களும் கோயில்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 876 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்த நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 10,634ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications