தமிழக மருத்துவ தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர்.. நவம்பர் 18ம் தேதி துவங்குகிறது கவுன்சிலிங்
சென்னை: மருத்துவ தரவரிசைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். நவம்பர் 18ம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வு துவங்க உள்ளது.
Recommended Video
மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியலை சென்னையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எண்ணத்தில் உதித்த சீர்மிகு திட்டம்தான், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் இட ஒதுக்கீட்டை மருத்துவ கல்வியில் வழங்கும் திட்டம். இதன் காரணமாக, அரசு பள்ளிகளைச் சேர்ந்த 405 பேருக்கு இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 710 மதிப்பெண்களுடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன பிரியா 705 மதிப்பெண்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். சென்னை மாணவி ஸ்வேதா 701 மதிப்பெண்களுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
நவம்பர் 18 முதல் மருத்துவ கலந்தாய்வு துவங்க உள்ளது. சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்.
7.5 சதவீதம் இட ஒதுக்கீடு காரணமாக பலன் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான தனி தரவரிசை பட்டியலையும் வெளியிடுகிறேன். இதன்படி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர், ஜீவித்குமார் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடம் அன்பரசன், 3வது இடம் திவ்யதர்ஷினி ஆகியோர் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications