நல்ல மாடு-.பெரியாருக்கு காவி துண்டு அணிவித்தால்- அர்ஜூன் சம்பத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வார்னிங்
சென்னை: அம்பேத்கரை தொட்டு பட்டபாடு போதாதா? தந்தை பெரியாரை தொட்டால் நிலைமை வேறாகிவிடும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளான நேற்று அம்பேத்கருக்கு காவி சட்டை, திருநீறு பட்டை அணிவித்து போஸ்டர் ஒட்டியது அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி. இது மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அம்பேத்கரை இழிவுபடுத்திய இந்து மக்கள் கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Exclusive ஸ்டாலினுக்கு கேரள அரசை கேட்க தைரியம் இருக்கா? திருட்டுத்தனம்! சவால் விட்ட அர்ஜூன் சம்பத்!
சென்ற இடம் எல்லாம் 'சிறப்பு'
மேலும் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்த அனுமதி கோரி வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் சென்றார் அர்ஜூன் சம்பத். அப்போது வழக்கறிஞர்கள் அவரைத் தாக்க முயன்று விரட்டியடித்தனர். பின்னர் நீதிமன்றத்தில், அம்பேத்கருக்கு காவி உடை, குங்குமம் பூச மாட்டேன் என உத்தரவாதம் கொடுத்தார் அர்ஜூன் சம்பத். இதன்பின்னர் சென்னை அம்பேத்கர் மணி மண்டபம் சென்ற அர்ஜூன் சம்பத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் மணி மண்டபத்தில் குவிந்திருந்த விடுதலை சிறுத்தைகள் அர்ஜூன் சம்பத் மீது காலணிகளை வீசினர். இதனால் அங்கும் பதற்றம் ஏற்பட்டது.
பவுத்த காவி உடையில் அம்பேத்கர்
பின்னர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், பவுத்த பிக்குகள் அன்றும் இன்றும் காவி உடை தான் அணிகிறார்கள். புத்த சிலாரூபங்களே காவியில் தான் காட்சி அளிக்கின்றன. அம்பேத்கரை காவி உடையிலே காட்டியது என்ன தவறு? அம்பேத்கர் மதம் மாறினார் எனவே இந்து மதத்திலே இருந்து மாறு என சொல்கிறார்கள். என்ன மதம் மாறினார்? பவுத்தம்? என்ன உடை அணிந்தார்? காவி. இந்த இரண்டு வரலாற்று உண்மையையும் இல்லை என சொல்லுகிறார்களா? ஒரு பக்கம் அம்பேத்கர் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன் என எழுதியதை காட்டி மதம் மாறு என்கிறார்கள். ஆனால் அம்பேத்கர் என்ன மதம் மாறினார் என்ன அணிந்தார் என்ற உண்மை பேசப்படக்கூடாது என்றால் எப்படி? வரலாற்று உண்மைகளை சொன்னால் கைது என்றால் எந்த விதத்திலே சரி?எனவும் எழுதியிருந்தார்.
இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது செய்தியாளர்களிடம் மனோ தங்கராஜ் கூறியதாவது: அம்பேத்கர் மனுவை அப்பட்டமாக பகிரங்கமாக எதிர்த்தவர். மனு இருக்கும் வரை இந்து மதத்தில் இருக்க மாட்டேன் என்று கூறி பவுத்த மதத்திற்கு சென்றார் அம்பேத்கர்.
பெரியாரை தொட்டால் நிலைமை வேறு..
ஒரு புறம் காந்தியின் ஐடியா தான் இந்தியாவின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு என்று பேசும் பிரதமர் மோடி, மறுபுறம் சாவர்க்கருக்கு மரியாதை செலுத்துகிறார். தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவிப்போம் என்கிறார் அர்ஜூன் சம்பத். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள்.. ஏற்கனவே அம்பேத்கரை தொட்டு பட்ட பாடு போதாதா? பெரியாரை தொட்டால் நிலைமை வேறாகிவிடும். இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.