தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது.. 94 சதவீதம் பேர் இந்தாண்டு தேர்ச்சி.. சாதித்த மாணவிகள்
சென்னை: தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8.17 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு 94.03 சதவீதம் பேர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. சுமார் 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வை எழுத பதிவு செய்திருந்தனர்.

இதில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வினை எழுதவில்லை. பிளஸ் 2 பொதுத்துதேர்வு முடிந்த நிலையில விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்ரல் 10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிந்துவிட்டன.
இந்நிலையில்,பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலுடன் பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடப்படுகிறது. தமிழக மாணவர்களுக்காக இந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதற்காக ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறது என்றார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் இந்த முறை 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 755451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாணவிகள் 405753 பேர் (96.38 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.4 சதவீதம் பேர் ( 349697 பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 4.93 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் அறியலாம். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து அறியலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலு தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் முடிவுகளை அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (NIC)மற்றும் அனைத்து மைய, கிளைநூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
இதுதவிர பள்ளிமாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். அதேபோல, பள்ளி மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications