மாசு கட்டுப்பாட்டு வாரிய மாஜி தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை.. விரைந்த அதிகாரிகள்
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
சென்னை: தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்... இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டம், ஆத்துார் அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம்.. இவருக்கு 63 வயதாகிறது.. 1983ல் ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று, வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணி புரிந்தவர்.
சுற்றுச்சூழல் இயக்குனராக பணிபுரிந்து, 2018ல் ஓய்வும் பெற்றவர்.. கடந்த அதிமுக ஆட்சியில், 2019ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார்... அப்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
நம்பிக்கையில்லாத பேச்சு.. குலாம் நபி ஆசாத்திற்கு என்னாச்சு.. திரிணமூலில் ஐக்கியமாகிறாரா?
சோதனை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர்... அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றில், சிபாரிசு காரணமாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆட்கள் தேர்வு மற்றும் டெண்டர் விவகாரம் குறித்த பதிவுகள் சிக்கின... இதையடுத்துதான், வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
ஆத்தூர்
சென்னை வேளச்சேரியில் உள்ள வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, சேலம் ஆத்தூர் அம்மம்பாளையத்தில் உள்ள பூர்வீக வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையும் நடத்தினர்.. இந்த சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கம், 13.50 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியதாகவும் கூறப்பட்டது.. மேலும், வெங்கடாசலத்தின் வீட்டில், 10 கிலோ சந்தன மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்ததாக தகவல்கள் வந்தன.
வனத்துறை
இவர் வனத்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி இருந்ததால், சட்ட விரோதமாக சந்தன மர கடத்தலில் ஈடுபட்டாரா, அந்த சந்தன மர பொருட்கள் மற்றும் சந்தன மரத்துண்டுகள் எப்படி கிடைத்தது என்பது குறித்த விசாரணையும் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.. அதேபோல, சேலம் அம்மன்பாளையத்தில், வெங்கடாசலத்திற்கு, 40 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், இதை அவர் எப்படி வாங்கினார் என்று விசாரிக்க போவதாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.
தற்கொலை
இறுதியில், வெங்கடாசலம் வீட்டில் லஞ்சஒழிப்பு சோதனையில் 6.5 கிலோ தங்கம், ரூ.13.5 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.. இந்த வழக்கின் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகின்றன.. இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டில், வெங்கடாசலம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், வெங்கடாசலத்தின் தற்கொலை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதுகுறித்த விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.