இப்படியே போனா என்ன பண்றது?.. வடியாத வெள்ளம்.. மீண்டும் வேகமெடுத்த மழை.. கலக்கத்தில் சென்னை மக்கள்!
சென்னை: சென்னையில் ஏற்கனவே பெய்த மழையால் உருவான வெள்ளமே இன்னும் வடியாத நிலையில் மேலும் தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தீவிர கனமழை பெய்துள்ளது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வேகமாக வலுப்பெற்று வருகிறது.
இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் சென்னையில் மழை தீவிரம் அடைந்துள்ளது.

வெள்ளம்
இந்த தொடர் மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை, தென் சென்னையில் அண்ணாநகர், முகப்பேர், வில்லிவாக்கம், தி.நகர், அஷோக் நகர், மாம்பலம், கோடம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு வெள்ளம் வடியாத காரணத்தால்
பம்புகள் மூலம் வெள்ளத்தை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

மீட்பு பணிகள்
பல நூறு மோட்டார் பம்புகள் இதற்காக களமிறக்கப்பட்டு நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் முழுமையாக நீரை வெளியேற்ற முடியவில்லை. இந்த நிலையில்தான் இதுவரை பெய்த மழைக்கே நீர் வெளியேறாத நிலையில் இனியும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் லேசாக குறைந்துள்ள மழை இன்று பிற்பகலுக்கு பின் வேகம் எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

வேகம் எடுக்கும்
இன்று பிற்பகலுக்கு பின் மழை தீவிரமாக பெய்யும். நாளை பிற்பகல் வரை சென்னையில் மழை பெய்யும். இன்றும் நாளையும் சென்னைக்கு இதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அடுத்த 48 மணி நேரங்கள் மோசமானதாக இருக்கும். முக்கியமாக சென்னையில் கடலோரம் இருக்கும் பகுதிகளில் தீவிர மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.

வெளியே செல்ல முடியவில்லை
வெள்ளம் காரணமாக மத்திய சென்னை, தென் சென்னையில் அண்ணாநகர், முகப்பேர், வில்லிவாக்கம், தி.நகர், அஷோக் நகர், மாம்பலம், கோடம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏற்கனவே மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தண்ணீர் தேங்கி உள்ளதால் வெளியே அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க செல்ல முடியாமல் முடங்கி உள்ளனர்.

அவதி
உணவுப்பொருட்கள், மளிகைப்பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். முதியவர்கள் மருத்துவகாரணங்களுக்காக வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டாலும் மக்கள் அதை வைத்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு மேல் சமாளிக்க முடியாது. அதோடு இன்னொரு பக்கம் வெள்ளம் வடியாததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடும் சிரமம்
இதனால் வீட்டில் இருந்து வொர்க் பர்ம் ஹோம் பார்ப்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். பல இடங்களில் தண்ணீர் வடியாத நிலையில் கொசுக்கள் மூலம் டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மாநகராட்சி முகாம்கள் அமைத்துள்ளது. உணவு , மருந்து வழங்குகிறது. ஆனாலும் பல இடங்களில் மாநகராட்சி தரப்பில் இருந்து யாருமே வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

மேலும்
இப்படிப்பட்ட நிலையில்தான் மேலும் 2 நாட்களுக்கு அதி கனமழை என்றால் என்ன செய்வது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சனிக்கிழமை பெய்த மழையின் பாதிப்பே இன்னும் போகவில்லை. அதில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.. இனிதான் மழை தீவிரம் எடுக்கும் என்றால் என்ன செய்வது.. இப்படியே மழை பெய்து கொண்டே இருந்தால் என்ன செய்வது என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











Click it and Unblock the Notifications