இன்று உருவாகிறது 3வது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. எங்கெல்லாம் மழை பெய்யும்? எங்கே கரையை கடக்கும்?
சென்னை: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 20 நாட்களாக தமிழ்நாடு முழுக்க சின்ன சின்ன பிரேக் எடுத்து கனமழை பெய்து வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டை புயல் தாக்கவில்லை என்றாலும் கூட இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தாக்கிவிட்டன. இதனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் ரெக்கார்ட் மழை பெய்தது.
ஒருநாளில் முடியாது.. 2017 நியாபகம் இருக்கா? வங்கக்கடல் தாழ்வு பகுதி.. வெதர்மேன் முக்கிய வார்னிங்!
மழை
முக்கியமாக சென்னையிலும், வட மாவட்டங்களிலும், பல்வேறு டெல்டா மாவட்டங்களிலும் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதியின் போது மழை பெய்தது. இரண்டாவது காற்றழுத்த தாழ்வு பகுதியின் போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. அதன்பின் இரண்டாவது காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்த போது சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்தது.
அடுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில்தான் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இலங்கை அருகே கடல் பகுதியில் இது உருவாகும்.
டெல்டா
அதன்பின் மேற்கு வடமேற்கு திசையில் இது நகர்ந்து தமிழ்நாடு கடல் பகுதியை அடையும். டெல்டா மாவட்டங்கள் அருகே வந்து பின் வடமாவட்டங்களுக்கு அருகே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது உறுதியாக எங்கே கரையை கடக்கும் என்று இன்னும் கணிக்கப்படவில்லை. இதனால் இன்று டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்கள்
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல இடங்களில் இங்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்று
தென் மாவட்டங்களிலும், டெல்டா அருகே உள்ள கடலோர பகுதிகளிலும் இன்று காற்று பலமாக வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டள்ளது. சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.