புதுவை-கடலூர் பெல்ட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் மழை இருக்கு! சென்னையில் மழை இருக்குமா? வெதர்மேன் தகவல்
சென்னை: திருச்சி, கரூர், நாமக்கல் பகுதிகளில் இன்று இரவும் நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னைக்கு முதல் மழையே அட்டகாசமாக அமைந்துவிட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கிவிட்டது.
கத்திவாக்கத்தில் அதிகபட்சமாக மழை பதிவாகியிருந்தது. இதையடுத்து பெரம்பூரில் இரண்டாவது அதிகபட்ச மழை பெய்திருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழை பெய்தது.

பகல் நேரம்
அதிலும் பகல் நேரத்திலும் மாலை நேரத்திலும் இந்த மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்றைய தினம் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இன்றைய தினம் புதுவையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மிக கனமழை
மிக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் நாளை மறுநாளும் புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தினம் சில இடங்களில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்யும் என வெதர்மேன் கூறியிருந்தார். அதன்படி மாலை 5 மணி அளவில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தீவிர மழை 45 நிமிடங்களுக்கு பெய்தது.

தமிழ்நாடு வெதர்மேன்
மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உள் மாவட்டங்களான ஈரோடு, சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் நேற்று போல் இன்றும் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று இரவும் நாளையும் உள் மாவட்டங்களில் பிற மாவட்டங்களான திருச்சி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

கடலூர், புதுவை
கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளில் மீண்டும் மழை பெய்யும். சீர்காழியில் 220 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அது போல் மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வேண்டும். தென் மாவட்டங்களான மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications