வடசென்னை டூ தென் சென்னைக்கு ஷிப்ட்டாகும் மேகங்கள்.. கூடவே சென்னைக்கு ஒரு குட் நியூஸ்.. வெதர்மேன்
சென்னை: சென்னையில் நிலப்பகுதியை சுற்றிலும் மேகக் கூட்டங்கள் குவிந்திருப்பதால் இன்று நீண்ட நெடிய மழை நாளாக அமையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. சென்னையில் நேற்று மாலை முதல் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அலுவலகம்
இந்த மழை இன்று காலையில் அலுவலகம் செல்லும் நேரம் வரை பெய்து வந்தது. தற்போதும் ஆங்காங்கே பெய்து வருகிறது. சென்னை பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தாலும் சில பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்திருந்தாலும் அரசு அமைத்த வடிகால்களால் சாலையில் தண்ணீர் தேங்காமல் உள்ளது.

5 நாட்களுக்கு கனமழை
தமிழகம் மற்றும் புதுவைக்கு அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் முக்கிய அப்டேட்டை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சென்னையில் நிலப்பகுதிகளை சுற்றிலும் மேகக் கூட்டங்கள் குழுமி இருக்கின்றன.

நெடிய மழை
இதனால் இன்றைய தினம் நீண்ட நெடிய மழை நாளாக அமையும். வட சென்னையில் நேற்று முதல் அதிக மழை பெய்து வந்தது. இன்றைய தினம் வடசென்னையை காட்டிலும் தென் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருக்கிறது. உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களுக்கு மேகக் கூட்டங்கள் நகர வாய்ப்பிருக்கிறது.

கத்திவாக்கத்தில் அதிகபட்ச மழை
பாண்டிச்சேரி மற்றும் புதுவையிலும் இன்றைய நல்ல மழை பெய்யும். இன்று இல்லாவிட்டாலும் நாளை அந்த பகுதிகளில் மழை பெய்யும். கத்திவாக்கத்தில் அதிகபட்சமாக 161 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பெரம்பூர் உள்ளது. மற்றொரு நல்ல செய்தி- மழை நாளை முதல் மற்ற மாவட்டங்களுக்கு செல்வதால் சென்னையில் நேற்று, இன்றைய தினத்தை ஒப்பிடும்போது படிப்படியாக மழை குறையும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications