ஃபனி புயலை பார்த்து தமிழக மக்கள் பயப்பட வேண்டாம்.. ஏன் தெரியுமா? வானிலை ஆய்வாளர் விளக்கம்
சென்னை: ஃபனி புயலால், சென்னை உட்பட தமிழகத்திற்கு ஆபத்து கிடையாது என்றும், மழை மட்டுமே நல்ல அளவுக்கு இருக்கும் என்றும், தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள காற்றழுத்த தாழ்வுநிலை, சென்னைக்கு தென் கிழக்கு 1350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது வரும் 30ம் தேதி ஃபனி என்ற பெயருடன் புயலாக சென்னை அருகே நிலைகொள்ளும் வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. அடுத்து புயல்தான்
சென்னைக்கு 150 கிமீ தொலைவில் இருக்கும்போது அதன் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வகுமார் கூறியதை பாருங்கள்:
சென்னையில் 60 கி.மீ வேகம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். புயலின் மையத்தின் வேகம் 200 கி.மீயாக இருக்கும். ஆனால், புயலின் வெளிச்சுற்று, சென்னையை தொடாமல், வெளியே இருந்து தரைக்காற்றை புயலை நோக்கி ஈர்க்கும். எனவே, சென்னையில் 60 கி.மீ வேகத்தில்தான் காற்று வீசும்.
ஆந்திராவில் பெரு வெள்ளம்
இதன் காரணமாக 30ம் தேதி முதல், நல்ல மழையை சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் எதிர்பார்க்கலாம். ஆனால், மே 1 முதல், ஆந்திராவின் கிழக்கு, மேற்கு கோதாவரி, விசாகபட்டினம், ஆந்திராவின் மையப்பகுதியான ஏனாம் பகுதிகளில் 225 கி.மீ வேகத்தில் காற்று வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம். வெள்ளப்பெருக்கையும் அங்கு ஏற்படுத்தும்.
மேற்குத் தொடர்ச்சி மலை
சென்னையை தொட்டு புயல் விலகி செல்வதால், தமிழகம் தப்பிக்கிறது. சீர்காழிக்கு வடக்கே உள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழை பெய்யும். அரபிக் கடலில் இருந்து காற்றை ஃபனி புயல் இழுக்கும் என்பதால், கேரளா, தமிழக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில், வரும் 30ம் தேதி முதல் மிதமான, கனமான மழை பெய்யும்.
வெப்பச் சலனம் மழை
அதேநேரம், தமிழக உள் மாவட்டங்களில் இருந்து காற்றை புயல் இழுக்கும் என்பதால், அங்கு மழை பெய்யும் வாய்ப்பு குறைவு. வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தால் பெய்யக்கூடும். மே 4ம் தேதிவரை ஆந்திராவில் மழை தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.