நெல் ஜெயராமனுக்கு அரசு உதவி.. மனிதநேய ஜனநாயக கட்சி நன்றி
சென்னை: பிரபல நெல் ஆராய்ச்சியாளர் நெல் ஜெயராமனுக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் மருத்துவ உதவியாக வழங்கி உதவியுள்ளதற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான மு. தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரபல நெல் ஆராய்ச்சியாளர் ' நெல்" ஜெயராமன் அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , தோழர் P.R. பாண்டியன் போன்ற தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் அவருக்கு துணை நின்று மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் அவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று நேற்றைய தினம் தமிழக முதல்வர் மாண்புமிகு.எடப்பாடியார் அவர்களை நானும், மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களும் சந்தித்து வலியுறுத்தினோம்.
அடுத்த 3 மணி நேரத்தில் அவருக்கு மருத்துவ செலவுக்காக 5 லட்சம் ரூபாயை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்.
இது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, அனைத்து விவசாயிகளுக்கும் செய்த மரியாதையாக கருதுகிறோம்.
இதற்காக மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.