எட்டுமணிக்கே க்யூல நின்னு... பூசணி சுத்தி தேங்காய் உடைச்சு... சென்னையில் டாஸ்மாக் ஓபன்
டாஸ்மாக் சென்னையில திறக்கறாங்க என்று சொன்ன உடன் இரண்டு நாளைக்கு முன்பே தயாராகி விட்டார்கள் சென்னை குடிமகன்கள். இன்று கடை திறக்கும் முன்னே எட்டு மணியிலேயே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு க்யூவில் நின்று பா
சென்னை: ஏய் அந்த தேங்காயை எடுத்து முத ஆளுக்கு பூசணிக்கா சுத்து என்று உற்சாகமாக குரல் கேட்ட திசையில் திரும்பி பார்த்தால் ஏதோ கோவில் திறந்து விட்டார்களோ, சிதறுகாய் உடைத்து திருஷ்டி சுத்துகிறார்களோ என்று நினைக்கத்தோன்றும் ஆனால் இந்த சம்பவம் நடந்தது டாஸ்மாக் கடையில்தான். 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் ஷாப்களை ஆவணி அமாவாசையான நல்ல நாள் பார்த்து திறந்து தேங்காய் உடைத்து பூசணி திருஷ்டி சுற்றியுள்ளனர். வருமானம் நல்லா கிடைக்கணும் என்றும் வேண்டிக்கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
கொரானா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால், உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியதையடுத்து, கடந்த மே மாதம் 16ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கி வருகின்றன. ஆனால், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் அரசின் உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. ஆனால், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிசையில் நின்ற குடி மகன்கள்
இன்று காலையில் டாஸ்மாக் திறக்கப்படுவதை முன்னிட்டு வரிசையாக செல்வதற்காக கட்டைகள் கட்டப்பட்டு ஷாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கே நீண்ட வரிசையில் வந்து காத்திருந்தனர். காவல்துறையினரும் இந்த கூட்டத்திற்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது கொடுமை.
கொஞ்சம் கூட சீரியஸ் இல்லையே
கொரோனா தொற்று பரவும் இந்த காலத்தில் டாஸ்மாக் திறந்திருக்கிறார்கள். குடி மகன்களுக்கும் கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் தெரியலையே இடைவெளி இல்லாமல் நிற்கிறார்களே என்று கேட்கிறார் ஒருவர்.
மக்கள பாதிப்பு
கோவிலை மூடிட்டாங்க கோயம்பேடு காய்கறி கடையை மூடிட்டாங்க, பழக்கடையை மூடிட்டாங்க. நிறைய பேருக்கு வேலையில்லை ஆனால் நடுத்தர ஏழை மக்களின் வாழ்க்கை பாதிக்கும் டாஸ்மக் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இது நிஜமாகவே தேவையா என்று கேட்டிருக்கிறார் ஒருவர்.
இயல்பு நிலை திரும்பியது
டாஸ்மாக் ஓபன் செய்த உடன் அதை வாங்கி மச்சி ஓபன் தி பாட்டில் என்று கொண்டாடி வருகின்றனர் குடிமக்கள்.
Recommended Video
மதுக்கடை திறக்க எதிர்ப்பு
சென்னை நகரில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய மக்கள் அரசியல் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. ஆகஸ்ட் 15, 16 2 நாள் விடுமுறை என்பதால் ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.248.10 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. சென்னை நகரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் சென்னை மண்டலத்தில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.