டாஸ்மாக்கில் ரூல்ஸ் உடையுதோ? மதுக்கடைகள் குறையுதோ? வைகோவும் வேகமாக இறங்கிட்டாரே.. திமுக கவனிக்குது
சென்னை: டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், மதிமுகவும் இதே கோரிக்கையை முன்னெடுக்க துவங்கியிருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை பார்த்து தமிழகமே அதிர்ந்துபோய்விட்டது. டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக விற்கப்படுவதால்தான், அதை வாங்க முடியாமல், கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள். அதனால், குறைந்த விலையில் பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வெடித்தன.

டெட்ரா பேக்: ஆனால், மது விற்பனையையே, முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் வெடித்தன. இதற்குநடுவில், 90 மில்லி (கட்டிங்) டெட்ரா பேக் என்று சொல்லப்படும் காகிதக் குடுவையில் மது வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த உறுதியான அறிவிப்பும் வரவில்லை.
அதேபோல, குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மது வகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இதற்கும் அரசு தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டது. அந்தவகையில், டாஸ்மாக் விநியோகம் குறித்த எதிர்ப்புகளும், அதிர்ப்புகளும், சலசலப்புகளும் வெளிவந்தவாறே உள்ளன.
மதுக்கடைகள்: மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மிக முக்கியமானவர்.. கடந்த மாதம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளை கண்டு மனம்வெதும்பிய வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்..
அதில், "கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.. கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், மதுக் கடைகளையும் படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
பொதுக்குழு: இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என்றும் குஜராத், பீஹாரை பின்பற்றி, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மதிமுகவின் 30வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடந்தது.. இதில், மதிமுக பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, "அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, 2022 முதல் ஓய்வு பெற்ற, 6,000 தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய பட்ஜெட்டில், தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, வரும் 14ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்: அதுமட்டுமல்ல, டாஸ்மாக் மதுக் கடைகளை அரசு படிப்படியாக மூட வேண்டும். பிறகு, குஜராத், பீஹார் மாநிலங்களை போல, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை பரவி வரும் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது கூட்டணியிலுள்ள திமுகவின் கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications