சென்னை சிவானந்தா சாலையில் பொங்கி எழுந்த ஆசிரியர்கள்.. உடனடியாக கைது செய்த போலீஸ்
சென்னை: பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, சிவானந்தா சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபங்களில் தடுப்பு காவலில் வைத்தனர். பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் சிவானந்தா சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தின் பின்னணி பற்றி பார்ப்போம்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்த நிலையில், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியாது என்றும் தமிழக அரசு அறிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான்.அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்று வரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறதாகவும் சொல்லப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.450 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும் என்றும் இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் அடையும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்பு அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தங்களது கோரிக்கை குறித்து சென்னை, சிவானந்தா சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபங்களில் தடுப்பு காவலில் வைத்தனர். சென்னையில் இன்று பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற கோரி சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. சென்னை சிவானந்தா சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பகுதிநேர ஆசிரியர்களை இன்று காலை முதலே போலீசார் கைது செய்தனர். பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் சிவானந்தா சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications