238 பேருடன் அபுதாபி சென்ற சென்னை விமானத்தில் கோளாறு.. கடைசி நேரத்தில் கண்டுபிடித்த விமானி
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு எத்தியாட் ஏர்வேஸ் விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் ஓடுபாதை நோக்கி டாக்ஸி வேயில் ஓடத் தொடங்கிய போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். விமானம் அவசரமாக டாக்ஸிவேயில் நிறுத்தப்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் 238 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எப்போது பரபரப்பாக காணப்படும்.. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் 5-வது பிஸியான விமான நிலையமாக இருக்கிறது. அடையாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து ஓடுபாதை கொண்டுள்ள இந்தியாவின் ஒரே விமான நிலையமாக இருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. உள்நாட்டு விமானங்கள், வெளிநாட்டு விமானங்கள் ஒவ்வொரு நிமிடமும் வந்து சென்ற வண்ணம் இருக்கும் விமான நிலையம் ஆகும. நேற்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து அபுதாபிக்கு எத்தியாட் ஏர்வேஸ் விமானம் கிளம்ப நேற்று தயாரானது. நேற்று காலை 10.15 மணியளவில் நடைமேடை 25-ல் இருந்து புறப்பட்டது முன்னதாக விமானத்தில் 228 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என 238 பேர் ஏறி அமர்ந்திருந்தார்கள். விமானம் ஓடுபாதை நோக்கி டாக்ஸி வேயில் வேகமாக ஓடத் தொடங்கிய போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இதையெடுத்து விமானம் அவசரமாக டாக்ஸிவேயில் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் தரப்பட்டதையடுத்து, விமான பொறியாளர்கள் குழு மற்றும் சென்னை விமான நிலைய தீயணைப்பு படையினர் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்தார்கள். ப்போது விமானத்தில் ஹைட்ராலிக் பிரச்சினையால் எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையெடுத்து விமானம் பகல் 12.30 தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் இழுவை வாகனம் மூலம் நடைமேடைக்கு எத்தியாட் ஏர்வேஸ் விமானம் கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். விமானம் பழுது பார்க்கப்பட்டு பகல் 1.30 மணி வரை புறப்படாததால் ஓய்வறையில் தங்கி இருந்த பயணிகள் அதிருப்தியடைந்த நிலையில், அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகளிடம் அதிகாரிகள் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சுமார் 5 மணி நேர தாமதத்திற்கு பின்னர், மாலை 3.10 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது.
விமானம் நடைமேடையில் இருந்து ஓடிக்கொண்டு இருந்தபோதே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு, விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டதால், 238 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்' இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.














Click it and Unblock the Notifications