மகளுக்கு டெல்லி குறி- சிபிஐ, மத்திய விசாரணை ஏஜென்சிகள் தெலுங்கானாவில் கால் வைக்க கேசிஆர் அதிரடி தடை!
ஹைதராபாத்: சிபிஐ உட்பட மத்திய விசாரணை ஏஜென்சிகளுக்கான பொது அனுமதியை தெலுங்கானா மாநில அரசு அதிரடியாக நீக்கி உள்ளது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சிகளைக் குறி வைத்து மத்திய விசாரணை ஏஜென்சிகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருவாய்த்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆளும் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் மீதான வழக்குகளை தூசு தட்டி சிறையில் அடைத்து வருகிறது மத்திய பாஜக அரசு.

மத்திய அரசின் குறி
மத்திய பாஜக அரசின் இந்த வேட்டையாப்படுவோர் பட்டியலில் சிவசேனாவின் சஞ்சய் ராவத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி, தெலுங்கானாவில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி) ஆகியவற்றையும் மத்திய விசாரணை ஏஜென்சிகள் குறி வைத்திருக்கின்றன.

தெலுங்கானா தடை
டெல்லியில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தது மத்திய விசாரணைக்கு கொண்டு வந்தது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள், கவிதாவுக்கும் குறி வைத்திருக்கிறது இந்த விசாரணை ஏஜென்சிகள். இந்நிலையில் தங்களது மாநிலத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை நடவடிக்கை மேற்கொள்வதற்கு தெலுங்கானா அரசு தடை விதித்துள்ளது.

8 மாநிலங்கள் சிபிஐக்கு தடை
அதாவது பொதுவாக அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை மாநிலங்களில் விசாரணை நடத்த மாநிலங்கள் பொது அனுமதி வழங்கி இருக்கும். மேற்கு வங்கம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்கள் இந்த பொது அனுமதியை ரத்து செய்திருக்கின்றன. இதனால் முன்னரைப் போல நினைத்த நேரத்தில் இந்த ஏஜென்சிகள், மாநிலங்களில் விளையாடிவிட முடியாது. நீதிமன்ற படிகளேறியும் மாநில அரசின் அனுமதி பெற்றும்தான் இனி மாநிலங்களில் தங்களது சித்து விளையாட்டை விளையாட முடியும்.

9-வது மாநிலம்
இப்படி சிபிஐ உள்ளிட்ட மத்திய விசாரணை ஏஜென்சிகளுக்கான பொது அனுமதியை நீக்கிய மாநிலங்களின் பட்டியலில் 9-வது மாநிலமாக தெலுங்கானா இணைந்துள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவினர் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை பேரம் பேசும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் சூழ்நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு இந்த அதிரடியை மேற்கொண்டிருக்கிறது. இது நாடு முழுவதும் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications