தமிழக கோவில் நகைகள் 1977 ம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றம்.. தமிழக அரசு தகவல்
சென்னை: தமிழக கோவில்களில் உள்ள நகைகள் 1977 ம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனிடையே சரவணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பதிவேடுகள்
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோவில்களில் என்னென்ன நகைகள் உள்ளன என்பன குறித்து பதிவேடுகள் இல்லாததால் நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

38 கோயில்கள்
மேலும்,கோவில்களில் புராதான நகைகள் எவை என்பது குறித்தும் கோவிலுக்கு தேவையான நகைகள் எது என்பது குறித்தும் கண்டறிய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள 38 கோயில்களில் 2,137 கிலோ தங்கத்தை உருக்கி தங்க கட்டிகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும்,நகைகளை
தணிக்கை செய்யாமல் உருக்க கூடாது என வாதிடப்பட்டது.

வட்டி வருவாய்
இதற்கு பதிலளித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடுகையில், 1977 ம் ஆண்டு முதல் கோவில் நகைகள் உருக்கப்பட்டு வருவதாகவும், 5 லட்சம் கிலோ நகைகள் ஏற்கனவே உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ததன் மூலம் ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் வட்டி வருவாய் கிடைப்பதாக தெரிவித்தார்.

நீதிபதிகள்
மேலும் நகைகளை தணிக்கை செய்ய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக செப்டம்பர் 9 ம் தேதி இயற்றப்பட்ட அரசாணையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அரசானை குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதியளித்த நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications