இதோடு 6வது முறை.. உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு!
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்னும் இந்த தேர்தல் நடக்காமல் உள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கு மேல் வழக்கு
முதலில் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் உள்ளாட்சி தேர்தலை 2017ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

மீண்டும் மீண்டும்
நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. மூன்று வருடமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கு இன்னும் நடந்து வருகிறது.

அதிகாரிகள் நியமனம்
உள்ளாட்சி பணிகளை கவனிப்பதற்காக தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள்தான் தற்போது பஞ்சாயத்து பணிகளை கவனித்து வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக்கு காலம் முடிந்ததால் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆனால் இவர்களின் பதவிக் காலம் ஒவ்வொருமுறை நிறையவடையும் போதும், நீட்டிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் தற்போது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பருடன் உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது இது ஜூன் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6வது முறையாக உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்கு காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications