தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில்... ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை
சென்னை: தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானது என்பது வல்லுநர்கள் கருத்து. ஒன்று தடுப்பூசி, மற்றொன்று அதிகளவிலான கொரோனா பரிசோதனை.

அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே மாநிலத்தில் எத்தனை பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவாக கண்டறிய முடியும். அதன் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
இருப்பினும், நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பைக் குறைத்துக்காட்டப் பரிசோதனைகள் குறைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதேநேரம் தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பரிசோதனைகள் தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 9 பேர் உள்ளிட்ட 33,181 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவது ஒரு நல்ல நடவடிக்கையாகும். இதன் மூலம் மாநிலத்தில் வைரஸ் பரவல் விகிதம் எந்தளவு உள்ளது என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்க முடியும்.
அதேபோல மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதமும் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகே வைரஸ் பரவல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இன்று மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1264 பேர் 12 வயதுக்கு உட்பட சிறார்கள் ஆகும். கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் 148 சிறார்களுக்கு மட்டும் கொரோனா உறுதி செய்ய்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பாதிப்பு 1200ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications